கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல்…

சென்னை;
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்க்கட்சிகள் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை மோசமாக இருக்கிறது என விமர்சித்து வரும் நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகம் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தியாகராயநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று இரவு 9 மணியளவில் மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். அந்த சமயம் கட்சி அலுவலகத்திற்குள் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தென்சென்னை மாவட்ட செயலாளர் சிவா அவர்களால் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.