கோவை மேட்டுப்பாளையம் நகராட்சியில் கவுன்சிலர்களிடையே கடும் மோதல்…நாற்காலிகளை வீசி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு…

கோவை;
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் அவசரக் கூட்டம் நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக முறையாக நகர பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அப்புறபடுத்தாமல் உள்ளதால் சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைத்து அதிமுக கவுன்சிலர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இதற்கு பதில் அளிக்க வேண்டிய நகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் கூட்டத்தை நடத்த கூடாது அதிகாரிகள் வந்த பின் தான் கூட்டத்தை நடத்த வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர்.
ஆனால் நகராட்சி தலைவர் கூட்டத்தை நடத்த வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் கூறியதால் இரு தரப்பு கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் ஒரு கட்டத்தில் அது மோதலாக மாறியது.
அதிமுக கவுன்சிலர்கள் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக 17 வார்டு கவுன்சிலர் ரவிக்குமார் திடீரென அதிமுக பெண் கவுன்சிலர் மற்றும் விஜியலட்சுமி அகியோர் மீது கவுன்சிலர்கள் அமரும் இருக்கைகளை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கடுப்பான அதிமுக கவுன்சிலர்களும், திமுக கவுன்சிலர்களை தாக்க ஆயத்தம் ஆனார்கள்.
இதனையடுத்து நகராட்சி தலைவர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றும் பிரச்சினை முடிவுக்கு வராததால் மன்ற கூட்டத்தில் வைக்க பட்ட 11 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக ஆல் பாஸ் என கூறிவிட்டு சென்றார்.
இதனால் கோபமடைந்த அதிமுக கவுன்சிலர்கள் ஒன்பது பேரும் திமுக கவுன்சிலர்கள் குண்டர்கள் போல நடந்துகொள்வதாக கூறி மன்ற கூட்டத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நாற்காலியை தூக்கி வீசிய கவுன்சிலர் ரவிக்குமார் மற்றும் ஸ்ரீராம் என்ற இரு கவுன்சிலர்கள் மீது அதிமுக கவுன்சிலர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.