சருமத்தை பிரகாசமாக ஜொலிக்க வைக்க உதவும் கிவி பழம் !!

தீபாவளி, திருக்கார்த்திகை என அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருக்கின்றன. அதனை உற்சாகமாக கொண்டாடி மகிழ, பெண்கள் பலரும் சருமத்திற்கு பொலிவு சேர்க்கும் விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். பழங்களுடன் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை கொண்டே சருமத்திற்கு பிரகாசம் சேர்க்கலாம். வாழைப்பழம் மற்றும் தேனை கொண்டு சருமத்திற்கு பொலிவு சேர்க்கலாம்.
வாழைப்பழத்தில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை வழங்கக்கூடியவை.
தேன் முகப்பருவை எதிர்த்து போராடவும், சருமத்தை பளிச்சிட செய்யவும் உதவும். பழுத்த வாழைப்பழத்தை பிசைந்து அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து குழைத்து முகத்திற்கு மசாஜ் செய்தால் போதும். அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவி விடலாம்.
பப்பாளி பழத்திலும் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை சருமத்திற்கு புத்துணர்ச்சி தரக்கூடியவை. பப்பாளியில் இருக்கும் பப்பெய்ன் என்னும் என்சைம் இயற்கையான எக்ஸ்போலியண்டாக செயல்படும். அதாவது இறந்த சரும செல்களை நீக்கி சருமத்திற்கு பளபளப்பை கொடுக்கும். பழுத்த பப்பாளி பழத்தை முகத்தில் தடவி மசாஜ் செய்து வரலாம்.
ஆரஞ்சு பழத்தின் தோலையும் பயன்படுத்தலாம். அதனை உலர வைத்து பொடித்துக்கொள்ள வேண்டும். அதிலும் வைட்டமின் சி நிரம்பியுள்ளது. அது சருமத்தை பொலிவு பெற செய்யும். நன்கு பொடித்த ஆரஞ்சு தோலை தயிருடன் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். இது முகத்தில் படிந்திருக்கும் கறைகளை போக்கும். சரும துளைகளை சுத்தப்படுத்தி சருமத்தை பிரகாசிக்க செய்யும்.
ஸ்ட்ராபெர்ரி பழங்களில் ஆன்டி ஆக்சிடெண்டுகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளன. அதனுடன் எலுமிச்சை பழத்தின் சாறை கலந்து பயன்படுத்தலாம். சருமத்தில் படர்ந்திருக்கும் கரும் புள்ளிகளை குறைப்பதற்கு இவை உதவும். ஐந்து பெர்ரி பழங்களை துண்டுகளாக நறுக்கி அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை பழ சாறு கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
சருமம் புத்துணர்ச்சி பெறுவதற்கு கிவி பழம் சிறந்த தேர்வாக அமையும். அதனுடன் தயிரை சேர்த்து பயன்படுத்தலாம். அதன் மூலம் சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கலாம். சருமத்தை பிரகாசமாக ஜொலிக்க வைக்கலாம்.