தீபாவளி அன்று சூரிய உதயத்திற்கு 3¾ நாழிகைக்கு முன்பாக எழுந்து நீராட வேண்டும்!!

தீபாவளி அன்று சூரிய உதயத்திற்கு 3¾ நாழிகைக்கு முன்பாக எழுந்து நீராட வேண்டும்!!

தீபங்களை வரிசையாக வைத்து வழிபடுவதே, `தீபாவளி.’ மனதில் இருக்கும் தீய எண்ணங்களான இருளை நீக்கும் விதமாகவும், மனதில் தூய்மை என்னும் வெளிச்சம் பரவும் விதமாகவும்தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம், அதனை அழிப்பதற்காக அவதரிப்பவர் விஷ்ணு பகவான். அவர் ஒருமுறை வராக அவதாரம் எடுத்து, பூமியை கடலுக்கு அடியில் இருந்து மீட்டெடுத்தார். அப்போது அவருக்கும், பூமா தேவிக்கும் பிறந்தவன் நரகாசுரன். அவனை பெற்றெடுத்த பூமாதேவி, `எனது மகனுக்கு மரணம் ஏற்படக்கூடாது. அதற்கான வரத்தை தந்தருள வேண்டும்’ என்று விஷ்ணுவிடம் வேண்டினாள்.

அதற்கு விஷ்ணு, `இறவா வரத்தை யாருக்கும் கொடுக்கக்கூடாது. அதனால் பல துன்பங்கள் ஏற்படும். ஆனால் உன் மகனை யாராலும் கொல்ல முடியாது. அவன் என்னாலேயே வீழ்வான். அப்போது நீயும் என்னுடன் இருப்பாய்’ என்றார். அப்படி விஷ்ணு கொடுத்த வரத்தின் காரணமாகவே, கிருஷ்ண அவதாரத்தின் போது, பூமாதேவி சத்யபாமாவாக தோன்றினாள்.

பிரம்மதேவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான் நரகாசுரன். அவனது தவத்தால் மகிழ்ந்த பிரம்மதேவர் அங்கு தோன்றினார்.

அவரிடம், “நான் எந்த நிலையிலும் மரணிக்கக்கூடாது” என்று நரகாசுரன் வரம் கேட்டான். அதற்கு பிரம்மன், `உலகில் தோன்றிய அனைத்தும் மறைவது என்பது தவிர்க்க முடியாதது. ஆகையால் வேறு வரம் கேள்!” என்றார்.

சிறிது நேரம் மவுனமாக நின்ற நரகாசுரன், “பிரம்மதேவரே! எனது தாயினால்தான் எனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் என்ற வரத்தையாவது தாருங்கள்” என்றான். அவன் கேட்ட வரத்தையே அருளினார், பிரம்மன். `பெற்ற பிள்ளையை, எந்த சூழலிலும் தாய் கொல்லத் துணியமாட்டாள். எனவே தனக்கு மரணமே கிடையாது’ என்ற எண்ணமே நரகாசுரனை இவ்வாறு வரம் கேட்க வைத்தது.

வரத்தை பெற்றுக்கொண்ட நரகாசுரன், மூவுலகத்தையும் ஆட்டிப்படைக்க தொடங்கி விட்டான். தேவேந்திரன் முதலான தேவர்களை அடிமைபோல் நடத்தினான். மனிதர்களை துன்புறுத்தினான். நரகாசுரன், அசாம் ராஜ்ஜியத்தில் உள்ள பிரக்ஜோதிஷபுரம் என்ற இடத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்தான். நரகாசுரனின் கொடுமையால் துயரம் அடைந்த தேவர்கள், அந்த கொடுமையில் இருந்து தப்பிக்க கண்ணனின் திருவடிகளில் போய் சரணடைந்தனர். அசுரனை அழித்து தங்களையும், மக்களையும் காத்தருளும்படி கண்ணீர் வடித்தனர்.

`நல்லது நடக்கும் நம்பிக்கையோடு புறப்படுங்கள்’ என்று தேவர்களுக்கு உறுதியளித்த கண்ணன், அந்த வாக்குறுதியை காப்பாற்ற சத்யபாமாவை தேரின் சாரதியாக அமர்த்திக் கொண்டு, நரகாசுரன் ஆட்சி செய்யும் நகரமான பிரக்ஜோதிஷபுரம் நோக்கி சென்றார். நகரின் எல்லையை அடைந்த அவர், அந்த நகரின் பாதுகாவலாக இருந்த கிரி துர்க்கம், அக்னி துர்க்கம், ஜல துர்க்கம், வாயு துர்க்கம் என்னும் கோட்டைகளை அழித்து, அதன் பிறகு நகருக்குள் நுழைந்து போர் தொடங்க அறிகுறியாக சங்கை முழங்கினார்.

சத்தம் கேட்டு அரண்மனையில் இருந்து வெளிப்பட்ட நரகாசுரன், தனது கோட்டைகள் உடைக்கப்பட்டு துகள்களாக கிடப்பதையும், அதற்கு காரணமான கண்ணனையும் கண்டு கடும் சீற்றம் கொண்டான். தனது படைகளை திரட்டிக்கொண்டு கண்ணனுடன் மூர்க்கத்தனமாக போரிட்டான். ஆனால் சாந்தம் தவழ்ந்த முகத்துடன் அம்புகளை தொடுத்த கண்ணன், நரகாசுரனின் படைகள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்து விட்டார்.

இதனால் மேலும் கடும் கோபத்திற்கு ஆளான நரகாசுரன் ஏவிய அஸ்திரம் ஒன்று தாக்கி கண்ணன் தேரில் சாய்ந்து விட்டார். இல்லை… இல்லை… சாய்ந்தது போல் நடிக்க தொடங்கி விட்டார். அதுவரை தேர் ஓட்டும் சாரதியாக அமைதியாக இருந்த சத்யபாமா, தனது கணவரின் நிலைகண்டு கொதித்தெழுந்தாள். அதற்காகத்தானே கண்ணன் தேரில் மூர்ச்சையானதுபோல் விழுந்தார்.

கோபத்தில் கண்கள் சிவக்க, அம்பு மழை பொழிந்தாள் சத்யபாமா. அதில் இருந்து தப்பிக்க முடியாமல் நரகாசுரன் வீழ்ந்தான். நரகாசுரனை வதம் செய்த பின்னர் பூமாதேவியின் அம்சமான சத்யபாமாவுக்கு தனது மகன் இறந்துவிட்டானே என்ற துயரம் ஏற்பட்டது.

இருந்தாலும், `மகன் இறந்தது என் ஒருத்திக்குதான் துக்கம். ஆனால் அவனால் பல துன்பங்களை அடைந்த தேவர்களுக்கும், மக்களுக்கும் இது நன்மை அளிப்பது’ என்று மனதை ஒருவாறு தேற்றிக்கொண்டாள்.

பின்னர் கண்ணனிடம் இப்படி கூறினாள். `என் மகனை இழந்த துக்கம் எனக்கு இருந்தாலும், உலக மக்களுக்கு எவ்வித துக்கமும் இருக்கக்கூடாது. அன்று எல்லோரும் கங்கா ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி, விருந்து உண்டு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதற்கு அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டினாள்.

தீபாவளி அன்று சூரிய உதயத்திற்கு 3¾ நாழிகைக்கு முன்பாக எழுந்து நீராட வேண்டும். அதிகாலை நேரம் நீர் குளிர்ச்சியாக இருக்கும் என்பதால், வெந்நீரில் நீராடலாம் என்று சொல்லப்பட்டது. அன்றைய தினம் மாலையில் வீட்டின் வாசலில் இருந்து பூஜை அறை வரை தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

Leave a Reply