பேருந்தில் பெண்களிடம் விசிலடிக்கவோ , பாட்டு பாடவோ கூடாது…. மீறினால் காப்பு உறுதி…. தமிழக அரசின் அதிரடி அரசாணை…

பேருந்து பயணத்தின் போது பெண்களுக்கு தொந்தரவு தரும் பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிடவும், தொடர்ந்து அவர் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் காவல்நிலையத்தில் அவரை ஒப்படைக்கவும் அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. பொது போக்குவரத்து வாகனங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக புதிய விதிகளை சேர்த்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணையில், “பேருந்தில் பயணிக்கும் பெண்களை ஆண் பயணி முறைத்துப் பார்த்தல், கூச்சலிடுதல், விசில் அடித்தல், கண் சிமிட்டுதல், பாலியல் ரீதியாக சைகைகள் காட்டுதல், பாடல் பாடுதல், வார்த்தைகளை உச்சரித்தல், புகைப்படங்கள் எடுத்தல் போன்றவற்றை செய்யக் கூடாது. குறிப்பாக அவர்களின் எந்த செயலும், சக பெண் பயணிக்கு எரிச்சல் ஏற்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது.

இது போன்ற செயல்களில் ஈடுபடுவரை நடத்துநர் எச்சரிக்கை விடுத்த பிறகு, புகாருக்குள்ளான பயணியை இறக்கிவிடலாம் அல்லது வழியில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம்” என புதிய விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பெண் பயணிகள் வாகனத்தில் ஏறவோ, இறங்கவோ உதவி செய்கிறேன் என்ற பேரில் தவறான நோக்கில் நடத்துநர்கள் தொடக்கூடாது.

பயணத்தின் நோக்கம் குறித்து பொருத்தமற்ற கேள்விகளை பெண் பயணிகளிடம் கேட்கக் கூடாது.பயணிகளுக்கு குறிப்பாக பெண்கள், சிறுமிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் நடத்துநர்கள் நடந்து கொள்ளக் கூடாது எனவும் புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply