கல்யாண வீட்டிற்குள் புகுந்து காப்பியை ருசி பார்த்த கரடி ….ஊட்டியில் பரபரப்பு…
நீலகிரி;
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள இத்தலார் பகுதியில் வசித்து வருபவர் ஹட்டாரி நஞ்சன். இவரது வீட்டில் நேற்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து, நேற்றிரவு குடும்பத்தினர் அனைவரும் படுத்து தூங்கி உள்ளனர்.
அப்போது, நள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று, அவர்களது வீட்டிற்குள் புகுந்தது. வீட்டில் சிறிது நேரம் உலாவிய அந்த கரடி, அங்கு இருந்த இனிப்புகளை உண்டது. பின்னர், விருந்தினர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த காபி கேனை கீழே தள்ளி, அதில் இருந்த காபியை குடித்து மகிழ்ந்தது.
இதனை கண்டு தெருநாய் குரைக்கவே கரடி பின்னர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றது. இதனிடையே பாத்திரம் விழும் சத்தம் கேட்டு எழுந்த நஞ்சன் குடும்பத்தினர், கரடி உலாவும் காட்சிகளையும், அது காபி குடிக்கும் காட்சிகளையும் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது அந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.