விவசாயிகள் பிரச்சினை குறித்த கேள்விகள் கேட்போம்; முடிந்தால், தைரியம் இருந்தால் முதல்வர் விஜய் அவையில் வாயை திறந்து பதில் சொல்லட்டும்!! உதயநிதி சவால்…

சென்னை:
“காவிரி விவகாரம் குறித்துப் பேச நாளை ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர சபாநாயகரிடம் கடிதம் வழங்கியுள்ளோம். அப்போது விவசாயிகள் பிரச்சினை குறித்த கேள்விகள் கேட்போம்.

முடிந்தால், தைரியம் இருந்தால் முதல்வர் விஜய் அவையில் வாயை திறந்து பதில் சொல்லட்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தவெக அரசு இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தது என்று சொல்வதை விட, முழுக்க முழுக்க முதல்வருக்கு ஜால்ரா அடித்து புகழுரை செய்து, அதாவது மரபுக்கு மீறிய செயல்களை வேளாண்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் செய்துள்ளார்.

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டத்தை எல்லாம் புது திட்டம் போல் பெயர் மாற்றி, ஒரு வார்த்தையை மட்டும் சேர்த்து அறிவித்துள்ளனர்.

விவசாயிகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக பல பிரச்சினைகள் இருக்கிறது; விவசாயிகள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேளாண் பட்ஜெட்டில் உருப்படியாக ஒன்றும் இல்லை.

குறிப்பாக, தேர்தலின்போது 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் முழு பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதாக முதல்வர் விஜய் வாக்குறுதி அளித்தார்.

ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், விவசாயிகளை ஏமாற்றியுள்ளார்

மேகேதாட்டு, காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வர் கர்நாடகா செல்கிறேன் என்கிறார்.

அங்குள்ள முதல்வர் வர வேண்டாம் என்கிறார். மேகேதாட்டு, காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று சபாநாயகர் இடம் கடிதம் கொடுத்துள்ளேன்.

இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும். இதற்கும் வழக்கம் போல முதல்வர் பதில் பேசவில்லை.

மேகேதாட்டு அணை விவகாரம், பயிர்க் கடன் தள்ளுபடியில் ஏற்பட்ட ஏமாற்றம், குறுவை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் எதிர் கொள்ளும் வேதனை ஆகியவற்றை முன்னிறுத்தி, தவெக ஆட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் வகையிலும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் கருப்புச் சட்டை அணிந்து வந்துள்ளோம்.

காவிரி விவகாரம் குறித்துப் பேச நாளை ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர சபாநாயகரிடம் கடிதம் வழங்கியுள்ளோம்.

அப்போது விவசாயிகள் பிரச்சினை குறித்த கேள்விகள் கேட்போம். முடிந்தால், தைரியம் இருந்தால் முதல்வர் விஜய் அவையில் வாயை திறந்து பதில் சொல்லட்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *