காத்மாண்டு:
நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 810 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 3,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கடந்த 26-ம் தேதி இமயமலையில் பனிமலைகள் உடைந்து நேபாள நதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த நாட்டின் ரசுவா, தாதிங், நுவாகோட், கோர்க்கா, டானாஹன், நவல்பூர், பராசி, சிட்வான் ஆகிய 8 மாவட்டங்கள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. நேபாளம் – சீனா இடையிலான பிரதான நெடுஞ்சாலை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது.
ஐந்தாவது நாளாக நேபாளத்தில் நேற்று மீட்புப் பணிகள் நடைபெற்றன. அந்த நாட்டின் நீர் மின் திட்டங்களில் பணியாற்றிய 898 தொழிலாளர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்காக இந்திய நிபுணர் குழு நேற்று முன்தினம் நேபாளம் சென்றது. அங்கு திரிசூலி 3ஏ நீர்மின் திட்டப் பகுதியின் சுரங்கத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர்.
சுரங்கம் முழுவதையும் சகதி மூடியிருப்பதால் மீட்புப் பணியில் பெரும் சிரமம் ஏற்பட்டிருக்கிறது.
நேபாளம் சென்ற இந்தியக் குழுவினர் நேற்று முதல் கட்டமாக 6 அங்குலம் அளவுக்கு சுரங்கத்தில் துளையிட்டு ஆக்சிஜன் செல்ல வழியை ஏற்படுத்தி உள்ளனர்.
மேலும் ஒரு நபர் நுழையும் அளவுக்கு சுரங்கத்தின் பக்கவாட்டில் 4 இடங்களில் துளையிட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
இதன்மூலம் சுரங்கத்துக்குள் சென்று தொழிலாளர்களை மீட்க முடியும் என்று இந்திய நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இதுவரை 810 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
மிக அதிகபட்சமாக சிட்வான் மாவட்டத்தில் 248 உடல்கள் மீட்கப்பட்டிருக்கிறது. கட்டிட இடிபாடுகளில் சிக்கிய நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர்.
அவர்கள் காத்மாண்டு உட்பட பல்வேறு நகரங்களின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்து உள்ளனர். மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டர், ட்ரோன்கள் மூலம் உணவு பொட்டங்கள், குடிநீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
நீர் மின் நிலைய திட்ட தொழிலாளர்கள் உட்பட சுமார் 3,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.
அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவின் சார்பில் தடவியல் மற்றும் மரபணு ஆராய்ச்சி நிபுணர்கள் நேபாளத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.
அடையாளம் தெரியாத நபர்களின் உடல்களை அவர்கள் மரபணு சோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க உதவி செய்வார்கள் என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.