காத்மாண்டு:
நேபாள வெள்ளத்தில் மாயமான 77 பக்தர்கள், 3 தன்னார்வலர்கள் என மொத்தம் 80 பேரைத் தேடும் பணி 2 வாரங்களாகத் தொடர்கிறது என கோவை ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கிய கோவை ஈஷா மையத்தைச் சேர்ந்த 80 பேரைக் கண்டறியும் பணிகள் தொடர்கின்றன.
மீட்பு மற்றும் தடயவியல் பணிகள் நடப்பதால், சீன-நேபாள எல்லைப் பகுதிகளில் இரு நாட்டு அரசுகளும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து தனியாரை வெளியேற்றியுள்ளன.
ஈஷா மையம் பல்வேறு நாடுகளின் தூதரகங்களுடன் இணைந்து தகவல்களைச் சேகரித்து வருகிறது.
அதேவேளையில், நேபாளத்தில் உள்ள 25 தன்னார்வலர்கள் ராணுவம் மற்றும் மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்படுகின்றனர்.
மேலும், 8 நாடுகளின் உதவி மையங்கள் மூலம் குடும்பங்களுக்குத் தகவல்கள் வழங்கப்படுவதோடு, பயணிகளின் உடைமைகளை மீட்கும் உதவிகளும் செய்யப்படுகின்றன.
வெள்ளத்தில் உயிரிழந்த 1,386 பேரில் 104 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன. 5,130 பேர் இன்னும் மாயமாகியுள்ளனர்.
மீட்கப்பட்ட 13,728 பேரில் பலர் மருத்துவமனை மற்றும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
டிஎன்ஏ பரிசோதனை உள்ளிட்ட அடையாளம் காணும் பணி நீண்ட காலம் எடுக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தூதரகங்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து கிடைக்கும் சரிபார்க்கப்பட்ட தகவல்களை உடனுக்குடன் குடும்பங்களுக்கு, குறிப்பாக நெருங்கிய உறவினர்களுக்கு, ஈஷா மையம் அனுப்பி வருகிறது.