சென்னை நகரில் வீடுகளின் முன் அனுமதியின்றி “நோ பார்க்கிங்” போர்டுகள் மற்றும் தடுப்புகளை வைத்திருப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

சென்னை நகரில் வீடுகளின் முன் அனுமதியின்றி “நோ பார்க்கிங்” போர்டுகள் மற்றும் தடுப்புகளை வைத்திருப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் அடையாறு, தியாகராய நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, மாம்பலம், அசோக்நகர் போன்ற பகுதிகளில் குடியிருப்பு வாசிகள், தங்கள் வீடுகளின் முன் அனுமதியின்றி “நோ பார்க்கிங்” போர்டுகளை வைத்துள்ளதாக கூறி, நந்தகுமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்கும் வகையில் அனுமதியின்றி “நோ பார்க்கிங்” போர்டுகளை வைப்பதுடன், பூந்தொட்டிகளையும் வைத்துள்ளதாகவும், இதுகுறித்து தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்ட போது, இதுபோல போர்டுகள் வைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என போக்குவரத்து காவல் துறையும், சென்னை மாநகராட்சியும் பதிலளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. னுமதியின்றி வைக்கப்பட்டுள்ள இந்த போர்டுகளையும், பூந்தொட்டிகளையும் அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, இந்த போர்டுகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி போக்குவரத்து காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்திருந்தது.

இந்தநிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, பொது இடங்களில் சட்டவிரோதமாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து நோ பார்க்கிங் போர்டுகள், நோ பார்க்கிங் தடுப்புகள் அகற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுட்டிகாட்டினார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் முன் அனுமதியின்றி “நோ பார்க்கிங்” போர்டுகள் மற்றும் தடுப்புகளை வைத்திருப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படிகாவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.மேலும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் இதுகுறித்தான விதிமுறைகளை இணையதளத்தில் வெளியிடவேண்டும், மேலும் பத்திரிகை ,ஊடகங்களிலும் பிரசுரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்..

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *