சென்னை:
சென்னையில் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு சமையல் காஸ் விநியோகிக்க கடற்கரையோரமாக குழாய்கள் பதிப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னையை சேர்ந்த டோரண்ட் காஸ் என்ற நிறுவனம் சென்னையில் குழாய்கள் மூலம் வீடுகள்தோறும் சமையல் காஸ் விநியோகிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டம் ரூ.48 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.
அதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெட்டுவாங்கேணி, நீலங்காரை, திருவான்மியூர், அடையார், சேப்பாக்கம், பாரிமுனை, ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர், நெட்டுக்குப்பம் ஆகிய பகுதிகள் வழியாக 466 கிமீ நீளத்துக்கு கடலோரப் பகுதியில் குழாய்களை அமைக்க உள்ளது.
இதில் 260 கிமீ தூரத்துக்கு குழாய்கள் அமைக்கப்படும் இடங்கள், கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் வருகிறது. அதனால் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழக கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தது.
அதை கவனமுடன் பரிசீலித்த ஆணையம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்திருந்தது. அதை பரிசீலித்த மத்திய அரசு இத்திட்டத்துக்கு தற்போது சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.