பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கலபுரகி புறநகர் யாத்ராமி பகுதியில் கஸ்தூரி பாய் காந்தி உண்டு, உறைவிடப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக விஜயாஸ்ரீ பட்டீல் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் பள்ளியில் பணியாற்றி வரும் ஊழியர்களை மசாஜ் செய்ய சொல்வதும், கால், கைகளை பிடித்துவிடும்படி கூறி வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி பணியில் இருந்த விஜயாஸ்ரீ, பள்ளியில் உதவியாளராக பணியாற்றி வரும் ஒரு பெண் ஊழியரை மிரட்டி மசாஜ் செய்யும்படி கூறியுள்ளார். அந்த பெண் முடியாது என்றாலும், தொடர்ந்து மிரட்டி மசாஜ் செய்யும்படி கூறியுள்ளார்.
அதன்படி வேறு வழியின்றி அந்த பெண்ணும், விஜயாஸ்ரீயின் தோள்பட்டையை இரு கைகளால் மசாஜ் செய்துள்ளார்.
இதை பள்ளியில் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் வாட்ஸ்-அப் குழுவிலும் இந்த வீடியோவை பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு இந்த வீடியோவை அனுப்பி வைத்து, தலைமை ஆசிரியை விஜயாஸ்ரீ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளனர். மேலும் தலைமை ஆசிரியைக்கு, உதவியாளர் மசாஜ் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பேசு பொருளாக மாறி உள்ளது.