“செங்கோட்டையனுடைய அரசியல் அனுபவமும், அரசியல் களப்பணியும் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்துக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும்” – விஜய் வரவேற்பு !!

சென்னை:
“செங்கோட்டையனுடைய அரசியல் அனுபவமும், அரசியல் களப்பணியும் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்துக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும்” என்று அக்கட்சியின் தலைவர் விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலியில் கூறியிருப்பதாவது: “20 வயது இளைஞராக இருந்தபோது எம்ஜிஆரை நம்பி, அவருடைய மன்றத்தில் சேர்ந்தவர். அந்த சிறிய வயதிலேயே எம்எல்ஏ என்ற ஒரு பெரிய பொறுப்பை ஏற்றவர்.

அதன் பிறகு அவருடைய பயணத்தில், அந்த இயக்கத்தின் மிகப்பெரிய இருபெரும் தலைவர்களுக்கு உறுதுணையாக அரசியல் களத்தில் இருந்தவர்.

இப்படி 50 ஆண்டுகளாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையனுடைய அரசியல் அனுபவமும், அரசியல் களப்பணியும் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்துக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அவரையும், அவருடன் இணைந்த மற்றவர்களையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சென்னை அருகே பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்துக்கு வந்த செங்கோட்டையன், அங்கு அக்கட்சியின் தலைவர் விஜய்யை சந்தித்து பேசினார்.

பின்னர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட ஆதரவாளர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய செங்கோட்டையன், நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவுவை சந்தித்து, தனது எம்எல்ஏ பதவி ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *