கடலூர்;
கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தது. குடியிருப்பு பகுதிகள் விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்தது. விளைநிலங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வங்க கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.
இந்த கனமழையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 13 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தன. நேற்று காலையும் மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மேலும் சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.
இதுபோல பரங்கிப்பேட்டை அருகே உள்ள மணிக்கொல்லை, பூவாலை, பால்வாத்துன்னான், அலமேலுமங்காபுரம், வயலாமூர், சேந்திரக்கிள்ளை, வல்லம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விளைநிலங்களில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியுள்ளது.
நேற்றைய மழையளவு: சேத்தியாத்தோப்பில் 124.1 மிமீ, ஸ்ரீமுஷ்ணத்தில் 112 மிமீ, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் 99.3 மி.மீ, பரங்கிப்பேட்டையில் 99 மி.மீ, கடலூரில் 97.3 மி.மீ, சிதம்பரத்தில் 91 மி.மீ, லால்பேட்டையில் 84.4 மி.மீ, புவனகிரியில் 83 மி.மீ, அண்ணாமலைநகரில் 81 மி.மீ, காட்டுமன்னார்கோவிலில் 69 மி.மீ, வேப்பூரில் 65 மி.மீ, விருத்தாசலத்தில் 46 மி.மீ, பண்ருட்டியில் 40 மி.மீ, குப்பநத்தத்தில் 38.8 மி.மீ, லக்கூரில் 30.3 மி.மீ மழை பெய்தது.