“‘பராசக்தி’ படத்தில் வரும் செழியன் நான்தான்; தமிழ் வாழ்க என சிவகார்த்திகேயன் கத்துவதைப் பார்க்கும்போது, நானே கத்தியது போல இருந்தது” – சீமான்!!

சென்னை:
“‘பராசக்தி’ படத்தில் வரும் செழியன் நான்தான். தமிழ் வாழ்க என சிவகார்த்திகேயன் கத்துவதைப் பார்க்கும்போது, நானே கத்தியது போல இருந்தது” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘பராசக்தி’ படத்தைப் பார்த்த பிறகு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ் வாழ்க என சிவகார்த்திகேயன் கத்துவதைப் பார்க்கும்போது, நானே கத்தியது போல இருந்தது. ‘பராசக்தி’ படத்தில் வரும் செழியன் நான்தான்.

ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் மொழி முக்கியம். விரும்பினால் எந்த மொழியையும் கற்போம். தேவை என்றால் நிச்சயம் வேறு மொழிகளை கற்போம். ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள அதிகபட்சமாக ஆறு முதல் ஏழு மாதங்கள் ஆகும். தேவை ஏற்படும்போது அதை கற்கத் தானே போகிறோம்.

அதை விட்டுவிட்டு ஒரு மொழியைக் கட்டாயம் படிக்க வேண்டும் எனச் சொல்வதை நிச்சயம் ஏற்க முடியாது. அது சரியாகவும் இருக்காது. அனைத்து மொழிகளையும் மதிக்க வேண்டும்.

வலுக்கட்டாயமாக இந்தி திணிப்பைச் செய்யக்கூடாது என்பதற்கு கேரளா, வங்காளம் என அனைத்து மாநிலங்களிலும் இருந்து எதிர்ப்பு இருந்ததாகவே இந்தப் படம் சொல்கிறது. இறுதியாக ஒரு படம் முடியும் தருவாயில் ‘தமிழ் வாழ்க’ என வருகின்றதென்றால் அதை பாராட்டியாக வேண்டும்.

மொழிப் போராட்ட உணர்வை எடுத்துக்கொண்டு திரைக்கதையைக் கற்பனையாக உருவாக்கியுள்ளனர். ‘பராசக்தி’ படத்தை பெண் இயக்குநர் நன்றாக இயக்கியுள்ளார். அவர் இயக்கிய மூன்று படங்களையும் பார்த்துள்ளேன். இது ஒரு பெரிய முயற்சி.

படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஜி.வி பிரகாஷின் பின்னணி இசை, பாடல் மிகச் சிறப்பாக இருந்துள்ளது.

மொத்தத்தில் ‘பராசக்தி’ ஒரு நல்ல படமாக வெளிவந்துள்ளது. ஒளிப்பதிவும் நன்றாக உள்ளது. ஆனால் அவர்கள் மொழிப் போரை அப்படியே காட்டவில்லை.

இது நமது மொழிப்போர் வரலாறும் இல்லை. அதேநேரம் அப்படம் மொழி உணர்வைச் சிதைக்கவும் இல்லை” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *