சென்னை:
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல் ஹாசனை தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கணேசநாதன் கீதீஸ்வரன் சந்தித்துப் பேசினார்.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கணேசநாதன் கீதீஸ்வரன், அவரது மனைவி கிருத்திகா தேவி, இலங்கை காவல்துறை முன்னாள் எஸ்.எஸ்.பி (SSP) கணேசநாதன் மற்றும் இதர தூதரக அதிகாரிகள் ஆகியோர் இந்த மரியாதைப் பூர்வமான சந்திப்பை மேற்கொண்டனர்.
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான வலுவான மற்றும் நீடித்த இரு தரப்பு உறவை இந்தச் சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது.
இந்த சந்திப்பின் போது மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மவுரியா IPS (ஓய்வு), பொதுச்செயலாளர் அருணாச்சலம், தலைமை நிலைய செயலாளர் செந்தில் ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.
இலங்கையின் தற்போதைய வளர்ச்சிப் பணிகள் குறித்து கமல்ஹாசனிடம் விளக்கப்பட்டது.
இந்த உரையாடல் இரு தரப்புப் புரிதல், ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ரீதியிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்தது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.