இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெறப்போவது உறுதி; நான் ஏன் கிங்மேக்கராக இருக்கப் போகிறேன் – தவெக தலைவர் விஜய்!!

சென்னை:
“இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெறப்போவது உறுதி எனும்போது, நான் ஏன் கிங்மேக்கராக இருக்கப் போகிறேன்,” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னர் முதன்முறையாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார்.

சென்னையில் அவரைச் சந்தித்த அந்த ஊடகக் குழுவினரிடம் விஜய் கூறியதாவது: கரூர் சம்பம் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. இன்றளவும் என்னை அந்த நிகழ்வு பாதிக்கிறது, இப்படியொரு நிகழ்வு நடக்கும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

நான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறேனோ அதில் நான் உறுதியாக இருப்பேன். எனது இலக்குகள் பற்றி அறியாமல் நான் எதையும் செய்வதில்லை. அந்தவகையில், அரசியல் தான் எனது எதிர்காலம் என்று நான் முடிவு செய்துவிட்டேன்.

‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீட்டுக்குச் சிக்கல் வரும் என்று நான் முன்கூட்டியே கணித்திருந்தேன்.

எனது படம் அரசியல் காரணங்களுக்காக நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு நான் மனதளவில் தயாராகியிருந்தேன். ஆனால், படம் தள்ளிப்போவதால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நெருக்கடிக்காக நான் வருந்துகிறேன்.

அரசியலில் நான் கிங்மேக்கராக முத்திரை குத்தப்பட விரும்பவில்லை. நான் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற சூழல் இருக்கும்போது நான் ஏன் கிங்மேக்கராக இருக்கப் போகிறேன். எனக்குச் சேரும் கூட்டத்தை நீங்கள் கவனித்திருக்கிறீர்கள் தானே!.

நான் பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்துள்ளேன். இனி அரசியல் செய்வது என்று தீர்மானித்துதான் வந்துள்ளேன்.

இந்த மாற்றம் அத்தனை எளிதாக நடந்துவிடவில்லை. அரசியலில் எனது ரோல் மாடல் எம்ஜிஆர், ஜெயலலிதா தான். இவ்வாறு அந்தப் பேட்டியில் விஜய் கூறியுள்ளார். மேலும், விஜய் தான் ஷாருக்கானின் தீவிர விசிறி என்றும் கூறியுள்ளார்.

தவெகவுக்கு அண்மையில் தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியது. பொதுச் சின்னம் கிடைத்ததை தவெக தலைவர் விஜய், முதல் வெற்றி என்று சிலாகித்துப் பதிவிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *