மும்பை:
மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டம், பரத்வாடா நகரை சேர்ந்தவர் முகமது அயாஸ் என்கிற தன்வீர் (19). இவர் மீது, பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஆபாச வீடியோக்களை பதிவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், “வாட்ஸ்-அப், ஸ்னாப்சாட் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் 180 சிறுமிகளை முகமது அயாஸ் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.
பிறகு அவர்களை மும்பை மற்றும் புனேவுக்கு அழைத்துச் சென்று, ஆபாச வீடியோக்களை எடுத்துள்ளார். இது தொடர்பாக இவரிடம் 350 வீடியோக்கள் இருந்தன.
அந்த சிறுமிகளை பிளாக்மெயில் செய்யவும், அவர்களை பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தவும் அந்த வீடியோக்களை இவர் பயன்படுத்தியுள்ளார்” என்றனர்.
முகமது அயாஸ் தொடர்புடைய சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அவர் கடந்த செவ்வாய்க் கிழமை கைது செய்யப்பட்டார். அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் மேலும் 3 சந்தேக நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் முகமது அயாஸ் வீட்டில் இருந்த சட்டவிரோத கட்டுமானங்கள் நேற்று ஜேசிபி மூலம் இடித்து அகற்றப்பட்டன.
இது தொடர்பாக நகராட்சி ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.