அணுக்கனிம சுரங்க கால நீட்டிப்பு அரசாணை ரத்து: முதல்வர் விஜய்யிடம் அமைச்சர் செ.ராஜேஷ்குமார் நேரில் மனு அளித்து வலியுறுத்தல்!!

சென்னை,
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்க காலநீட்டிப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் விஜய்யிடம், சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் நேரில் மனு அளித்து வலியுறுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் (IREL) நிறுவனத்திற்கு அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டின் கால அவகாசத்தை கடந்த 10.6.2026 அன்று தமிழக அரசின் இயற்கை வளங்கள் துறை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

மேற்சொன்ன காலநீட்டிப்பு அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான செ.ராஜேஷ்குமார் தலைமையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தாரகை கத்பட் மற்றும் டி.டி.பிரவீன் ஆகியோர் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து விரிவான கோரிக்கை மனுவை அளித்தனர்.

அப்போது சுற்றுலாத்துறை அமைச்சர் முதல்-அமைச்சரிடம், கடந்த 10.6.2026 அன்று அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட ஓராண்டு காலநீட்டிப்பு அரசாணையை உடனடியாக மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கீழ்மிடாலம், மிடாலம், இனையம், புத்தன்துறை, ஏழுதேசம் மற்றும் கொல்லங்கோடு உள்ளிட்ட கடலோர மற்றும் கரையோர கிராமங்களில் இந்த சுரங்கத் திட்டம் அமைந்தால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம், உடல்நலம் மற்றும் கடலோரச் சூழல் ஆகியவை கடுமையாக பாதிக்கும் என்பதை தமிழக முதல்-அமைச்சரிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் விளக்கமாக எடுத்துரைத்தனர்.

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் நியாயமான கோரிக்கைகளையும், விளக்கத்தையும் கனிவோடு கேட்டறிந்த தமிழக முதல்-அமைச்சர் விஜய், மக்களை பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது; உங்களது கோரிக்கையின் மீது நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *