ஆர்சிபி அணியின் மதிப்பு ரூ.2,984 கோடியை கடந்து சாதனை!!

புதுடெல்லி:
பிராண்ட் மதிப்பு 300 மில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,984 கோடிக்கும் மேல்) கடந்த முதல் கிரிக்கெட் அணி என்ற வரலாற்றுச் சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) படைத்துள்ளது.

சர்வதேச முதலீட்டு வங்கியான ஹூலிஹான் லோகி வெளியிட்டுள்ள 2026-ம் ஆண்டுக்கான பிராண்ட் மதிப்பு அறிக்கையில், “ஐபிஎல் தொடரின் ஒட்டுமொத்த வணிக நிறுவன மதிப்பு 20.6 பில்லியன் டாலராக (சுமார் ரூ.1.97 லட்சம் கோடி) உயர்ந்து அசுர வளர்ச்சி கண்டுள்ளது. ஐபிஎல் தொடரின் வணிக மதிப்பு ஆண்டுக்கு 11.4 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.

தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக ஐபிஎல் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் தனிப்பட்ட பிராண்ட் மதிப்பும் 10.3 சதவீதம் உயர்ந்து 4.3 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. 2023-ம் ஆண்டுக்கு பிறகு மட்டும் ஐபிஎல் தொடர் பிராண்ட் மதிப்பு 1.1 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது.

ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பில் ஆர்சிபி தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. 2025-ல் 269 மில்லியன் டாலராக இருந்த இதன் மதிப்பு, நடப்பாண்டில் 16 சதவீதம் உயர்ந்து 312 மில்லியன் டாலராக (சுமார் ரூ.2,984 கோடி) அதிகரித்துள்ளது.

இதன் மூலம் சர்வதேச அளவில் 300 மில்லியன் டாலர் மைல்கல்லைக் கடந்த முதல் கிரிக்கெட் அணி என்ற பெருமையை ஆர்சிபி பெற்றுள்ளது.

இந்த வரிசையில் மும்பை இந்தியன்ஸ் அணி 264 மில்லியன் டாலர் மதிப்புடன் 2-வது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (245 மில்லியன் டாலர்) 3-வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் (244 மில்லியன் டாலர்) 4-வது இடத்திலும் உள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *