சென்னை,
தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் தனது முதல் சுதந்திர தின விழாவில், சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக் கொடியேற்றினார்.
நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
தமிழக அரசு சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் இந்த விழாவில் முதல்-அமைச்சர் தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு முதல்-அமைச்சர் விஜய் கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றினார்.
இதற்காக அவர், இன்று காலை சுமார் 8 மணியளவில் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார்.
மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே வந்ததும், சென்னை காவல்துறையின் மோட்டார் சைக்கிள்கள் முன்னும் பின்னும் அணிவகுத்து அவரை கோட்டைக்கு அழைத்து வந்தனர்.
காலை சுமார் 8.35 மணியளவில் கோட்டை முன்பாக அமைக்கப் பட்டுள்ள அணிவகுப்பு மரியாதை ஏற்ற விஜய் மேடையை வந்தடைந்தார். அவரை தலைமைச் செயலாளர் சாய்குமார் வரவேற்றார்.
அதன்பிறகு மேடைக்கு வந்த விஜய், அங்கு காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
பின்னர் கோட்டை கொத்தளத்துக்கு வருகை தந்தார். இந்த நிலையில் காலை 8.45 மணிக்கு கொடிக் கம்பத்தில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முதல்-அமைச்சர் விஜய் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் சுதந்திர தின உரையாற்றி வருகிறார்.