சென்னை:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா, கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம் அமைப்பது தொடர்பாக பேரவை விதி எண் 110-இன் கீழ் முதல்வர் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் பேரவையில் பேசுகையில், “தமிழகத்தில் செமிகண்டெக்டர் துறையில் (Semiconductor Sector) அதிக அளவு முதலீட்டினை ஈர்க்கவும், இத்துறையில் நமது மாநிலத்தின் பங்கினை கணிசமான அளவு உயர்த்திடவும், காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தில் Semiconductor & Electronics Manufacturing Park, ரூ.175 கோடி மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனம் மூலம் அமைக்கப்படும்.
இப்பூங்காவில், Semiconductor துறையில் புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கு ஏதுவாக உலகத்தரம் வாய்ந்த, R & D – Research and Development வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் மூலம் இத்துறையில் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் வரை முதலீடுகள் ஈர்க்கப்படும். மேலும், சுமார் 5,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.
நிதித் தொழில்நுட்ப (FinTech) புதுமைகளுடன் டிஜிட்டல் நிதிச் சேவைகளை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலம் கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் (Coimbatore FinTech Hub) பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
உலகத் தரத்திலான வசதிகள், அலுவலக இடங்கள், புத்தொழில் நிறுவனங்கள், நவீன ஆய்வகங்கள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு போன்ற அதிநவீன வசதிகள் இம்மையத்தில் இடம்பெறும்.
இதன்மூலம், கோயம்புத்தூர் மாவட்டத்தில், நிதி மற்றும் நிதிநுட்பத் துறையில் உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கவும், நவீன தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கவும், உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்படும்.
2026-27-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் முக்கிய இடங்களில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் (Multi Model Logistics Parks), உலர் துறைமுகங்கள் (Dry Ports) அமைத்து முதலீட்டை ஈர்க்க அரசு முயற்சிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள மாவட்டப் பகுதிகளில் முக்கிய உற்பத்தித் தொழிற்சாலைகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளதால், தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலம் ஆய்வு மேற்கொண்டு, திட்ட அறிக்கை தயார்செய்து அதன் அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் “பல்முனை சரக்கு போக்குவரத்து மையம் (Multi Model Logistics Hub)” ஒன்று அமைக்கப்படும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.