சென்னை:
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 28-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வரும் கன்றுக்குட்டி பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த கன்றுக்குட்டி 3 மாதமாக இருந்த போது நீலாங்கரையில் உள்ள தெருவில் வேகமாக வந்த கார் மோதி காயம் அடைந்துள்ளது. அப்போது விலங்குகள் நல ஆர்வலரான தேஜஸ்வி ரங்கன் என்ற கட்டிட வடிவமைப்பாளர் அந்த கன்றுக்குட்டியை மீட்டு தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் கன்றுக்குட்டிக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளித்து பராமரித்ததால் கன்றுக்குட்டி நன்றாக குணம் அடைந்தது. பின்னர் அந்த கன்றுக்குட்டிக்கு மிஸ்டர் அலெக்ஸ் என பெயரிட்டு வீட்டில் ஒருவராக வளர்க்க தொடங்கி உள்ளனர்.
தேஜஸ்வியின் வீடு அடுக்குமாடி குடியிருப்பில் 28-வது மாடியில் உள்ள நிலையில் அங்கிருந்து கன்றுக்குட்டி தினமும் பங்கிங்ஹாம் கால்வாயின் பரந்த காட்சியை பார்ப்பதாக கூறுகின்றனர்.
கன்றுக்குட்டி குறித்த வீடியோவை சாய் விக்னேஷ் சமூக வலை தளங்களில் பதிவிட்ட நிலையில் அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், அலெக்ஸ் மிகவும் அழகானவர்.
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என பதிவிட்டிருந்தார். சில பயனர்கள், கேலியான கருத்துக்களை பதிவிட்டனர். ஒருவர், கன்றுக்குட்டி பெரிதாகும் போது லிப்ட் வசதிக்கு என்ன செய்ய போகிறார்? என கேள்வி எழுப்பி இருந்தார்.