கோவை,
கோவை டாடாபாத் சிவானந்த காலனி பகுதியில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார்.
இதில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, திமுக மாவட்ட செயலாளர்கள் துரை.செந்தமிழ்ச் செல்வன், தொண்டா முத்தூர் ரவி, தளபதி முருகேசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
அப்போது, எஸ்ஐஆருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எஸ்ஐஆர் பணியை மேற்கொள்ள கூடாது எனவும் வலியுறுத்தினர். மேலும், ஒன்றிய பாஜ அரசை கண்டித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:
இந்திய அளவில் எஸ்ஐஆர் குறித்து முதலில் எதிர்ப்பை பதிவு செய்தவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். பாஜ அரசு ஐடி, ஈடி, சிபிஐ மூலம் தேர்தலில் வெற்றி பெற நினைத்து அதில் தோல்வி அடைந்தது. இதையடுத்து, தற்போது எஸ்ஐஆர் மூலம் திருட்டுத்தனமாக வெற்றி பெற நினைக்கிறது.
30 நாளில் 7 கோடி வாக்காளர்கள் படிவங்களை கொடுத்து அதை பூர்த்தி செய்து திரும்ப பெற்று வரைவு வாக்காளர் பட்டியல் வரும் என்றால் அது நிச்சயம் முடியாது என்பது தேர்தல் ஆணையத்திற்கு தெரியும். இருப்பினும், இது போன்ற முன்னெடுப்புகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.
பீகாரில் 68 லட்சம் பேர் நீக்கப்பட்டு உள்ள நிலையில், 21 லட்சம் சேர்க்கப்பட்டனர். நீக்கப்பட்ட 90 சதவீதம் பேர் மீண்டும் சேர்க்கப்படவில்லை. இதே போன்ற நிலையை தமிழகத்தில் ஏற்படுத்த பாஜ அரசு முயற்சி செய்கிறது.
இந்த எஸ்ஐஆர் பணிகளில் மிக கவனமாக இருக்க வேண்டும். வாக்கு என்பது நம் உரிமை. யார் தீர்மானிப்பது என்பது நமது உரிமை. 2026-ல் திமுக வென்று விட கூடாது என நினைக்கின்றனர்.
பாஜவிடம் அதிமுக அடிமையாக உள்ளது. பாஜகவின் பல்வேறு கூட்டணி கட்சிகள் எஸ்ஐஆர் பணிகள் குறித்து கருத்து கூறும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி ஆதரித்து வருகிறார்.
அடிமையாக இருந்து நாட்டை அடமானம் வைத்தது போல இன்று தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கும் பாஜ அரசுக்கு அதிமுக துணை போகிறது. அதிமுகவுக்கு தமிழ்நாட்டிலும், கோவையிலும் இது தான் இறுதி தேர்தலாக இருக்கும்.
கோவையில் கடந்த தேர்தலில் 10 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் வென்றது. வரும் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட பாஜக வென்று விட கூடாது. 10 தொகுதியிலும் திமுக வெற்றி பெற வேண்டும்.
திமுக ஆட்சியில் கோவையில் பெரியார் நூலகம், தங்க நகை பூங்கா, தொழில் துறை என கோவை வரலாறு காணாத வளர்ச்சியை பெற்றுள்ளது. இங்கு ஒரு அமைச்சர் இருந்தால் எப்படி இருக்கும் நினைத்து பாருங்கள்.
வரும் சட்டமன்ற தேர்தலில் கோவையில் 10 தொகுதியில் வெற்றி பெற்று சரித்திர சாதனையை உருவாக்க வேண்டும். மேலும், எஸ்ஐஆர் நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு முயற்சியை முறியடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, பறிக்காதே பறிக்காதே வாக்குரிமையை பறிக்காதே, தமிழர்கள் வாக்கை நீக்காதே, வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யாதே, என் வாக்கு என் உரிமை, வாக்கை திருடாதே என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில், கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.