காட்பாடி:
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகர்ப் பகுதியில் உள்ள இல்லத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையைத் தமிழக அரசு விட்டுக்கொடுப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றனர்.
அவர்களின் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்க முடியாது. யார் முயற்சி செய்தாலும், உச்ச நீதிமன்றமோ அல்லது காவிரி ஒழுங்காற்று ஆணையமாகக்கூட இருந்தாலும் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகேதாட்டுவில் கர்நாடக அரசால் அணை கட்ட முடியாது.
இது தொடர்பாக ஏற்கெனவே விளக்கம் கூறிவிட்டாலும், திரும்பத் திரும்ப பேசுவது எதற்கு என்று புரியவில்லை. இவ்வாறு துரைமுருகன் கூறினார்.