புதுடெல்லி:
டெல்லியிலுள்ள குச்சா மகாஜனி மார்க்கெட்டில் ஹவாலா ஏஜென்டாக இருந்தவர் பவன் குமார். இவர் டெல்லி, துபாய் இடையே பயணம் செய்து தனது வியாபாரத்தைப் பெருக்கி வந்தார்.
போதைப்பொருளை கடத்தும் பணியில் ஈடுபட்டு வந்த இவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துபாயிலிருந்து இந்தியாவுக்கு ரூ.2,500 கோடி மதிப்புள்ள 82 கிலோ கோகைன் போதைப்பொருளை கடத்தியுள்ளார். அதை டெல்லியிலுள்ள போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், கடந்த வாரம் ரூ.282 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை பவன் குமார் ஆட்கள் கடத்த முயன்றபோது அதையும் டெல்லி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்தபடியே அவர் தனது போதைப்பொருள் கடத்தல் தொழிலை செய்து வந்தார்.
இதனிடையே, பவன் குமாருக்கு எதிராக டெல்லியிலுள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு (என்சிபி), சர்வதேச சில்வர் நோட்டீஸை பிறப்பித்தது.
இதன்மூலம் உலகம் முழுவதும் பவன் குமாருக்கு சொந்தமான சொத்துகள், வர்த்தக தொடர்புகள் உள்ளிட்ட விவரங்களை கண்டறிய முடியும்.
பவன்குமார் தொடர்பான வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில் அவர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.