மதுரை:
மதுரை மாவட்டம் கல்லணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆட்சியர் அலுவலகத்தில் அவரது காரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனு அளிக்க, ஏராளமானோர் வந்தனர்.
இதி்ல் கல்லணை, அச்சங்குளம் சுற்றுவட்டாரங்களில் முறைகேடாக செயல்படும் கல்குவாரிகளை ஆய்வு செய்யக் கோரி, அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர்.
அப்போது, காரில் வீட்டுக்குப் புறப்பட்ட ஆட்சியர் காரை மறித்து முற்றுகையிட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த ஆட்சியர் மீண்டும் அலுவலகத்துக்கே சென்றுவிட்டார்.
இதையடுத்து, காவல் உதவி ஆணையர் ராஜேஸ்வரன் தலைமையிலான போலீஸார் வந்து முற்றுகையில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர், அவர்களில் 5 பேரை மட்டும் ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர். அதன் பின்னரும், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், கைது செய்வோம் என போலீஸார் எச்சரித்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.