அதிமுகவிடம் 59 சீட் கேட்க பாஜக திட்டமிட்டிருப்பதாக தகவல்!! பாஜக மேலிட தலைவர் பி.எல்.சந்தோஷ் ஆலோசனை!!

சென்னை;

அதிமுகவிடம் 59 சீட் கேட்க பாஜக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நேற்று சென்னையில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவை மீண்டும் கொண்டு வந்த கையோடு, டிடிவி தினகரனையும் இடம்பெறச் செய்துள்ளது பாஜக. இதற்கிடையே, சிங்காநல்லூர், மதுரை தெற்கு, காரைக்குடி உள்ளிட்ட 6 முக்கிய தொகுதிகளுக்குச் ‘சுற்றுப்பயணப் பொறுப்பாளராக’ அண்ணாமலை நியமிக்கப்பட்டார். தமிழிசை, முருகன், வானதி என சீனியர்களுக்கும் தொகுதிகள் பிரிக்கப்பட்டன.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், “அப்பாவிற்கு உடம்பு சரியில்லை” என்று காரணம் சொல்லி பொறுப்பாளர் பதவியிலிருந்து விலகினார் அண்ணாமலை. இந்த நேரத்தில் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப் போவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது.

நிலைமை மோசமாவதை உணர்ந்த பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ், நேற்று கமலாலயம் வந்து, ஆலோசனை நடத்தினார். இதில், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தலைவர்களிடம் சற்று கறாராகவே சந்தோஷ் பேசியதாக கூறப்படுகிறது. ‘‘விரைவில் தேர்தல் தேதி வந்துவிடும், ஏப்ரலில் தேர்தல் நடக்கப்போகிறது. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம். உங்களுக்குள் இருக்கும் ஈகோவை மூட்டை கட்டி வைத்துவிட்டு வேலையைப் பாருங்கள்’ என தெரிவித்துள்ளார்.

அப்போது,தமிழக பாஜக நிர்வாகி ஒருவர், “அண்ணாமலை திடீரென ஒதுங்குவது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அவர் மீண்டும் வழக்கமான அரசியல் பாணிக்கு மாற வேண்டும்.

அதுதான் நமக்கு நல்லது” என என கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு அந்த விஷயத்தை டெல்லி தலைமை பார்த்துக் கொள்ளும் என்று கூறிய சந்தோஷ் இறுதியில், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு சதவீத அடிப்படையில் நாம் 20 சதவீத இடங்களைக் கேட்கப் போகிறோம்.

அதற்கான வேலைகளை இப்போதே பாருங்கள். மத்திய அரசின் திட்டங்கள், திமுகவின் ஊழல் எனப் புகார்களைப் பட்டியலிட்டுத் தெருத்தெருவாகப் பிரச்சாரம் செய்யுங்கள்’ என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. பாஜகவின் 20 சதவீத கணக்கு அடிப்படையில், 59 தொகுதிகள் வருகின்றன.

இதன்படியே அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை கொண்டு செல்ல பாஜக திட்டமிட்டிருப்பதாக, பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *