சென்னை:
அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.
மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. துபாய் உள்பட பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளுக்கு பல்வேறு காரணங்களால் பயணம் செய்தவர்கள், வான்வெளி மூடப்பட்டுள்ளதால் இருந்து திரும்ப முடியாமல் பலர் சிக்கித் தவிக்கின்றனர்.
போர் சூழல் காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், பலர் செய்வதறியா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், போர் காரணமாக துபாயில் சிக்கித்தவிப்பவர்களுக்கு பிரபல நடிகர் சோனு சூட் முன்வந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், துபாயில் தங்க இடமின்றி தவிப்பவர்கள் தன்னை தொடர்பு கொண்டால், பாதுகாப்பான தங்குமிட வசதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்த X தளப் பதிவில் அவர், “போர் காரணமாக பல பயணிகள் துபாயில் சிக்கித் தவிக்கின்றனர்.
நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ தங்குவதற்கு இடம் இல்லையென்றால், நாங்கள் பாதுகாப்பான தங்குமிடத்தை இலவசமாக வழங்குகிறோம்.
தேச பேதம் கிடையாது, நிபந்தனைகள் இல்லை. மனிதாபிமானம் மட்டும் போதும். உதவி தேவைப்பட்டால் இன்ஸ்டாகிராமில் @dugastaproperties எங்களுக்கு DM அனுப்புங்கள். தேவைப்படும் ஒருவரைச் சென்றடைய இதைப் பகிரவும்,” என குறிப்பிட்டுள்ளார்.