சென்னை:
பதிவுத்துறை, ஊரகவளர்ச்சித்துறை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவை சார்பில் ரூ.155.81 கோடியில் சார்பதிவு அலுவலகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலக கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோயம்புத்தூர்– கிணத்துக்கடவு, சூலூர், தூத்துக்குடி – ஏரல், விழுப்புரம் -திருவெண்ணைநல்லூர், திருவள்ளூர் – பொன்னேரி, திருப்பத்தூர் – 2 எண் இணை சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் சிவகங்கை – திருப்புவனம் என ரூ.14.92 கோடியில் பதிவுத்துறைக்கு கட்டப்பட்டுள்ள 7 புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்தார்.
இதுதவிர, கோயம்புத்தூர் (வடக்கு) பதிவு மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட சர்க்கார்சாமக்குளம் சார்பதிவாளர் அலுவலகம், 22 கிராமங்களை உள்ளடக்கி புதிதாக உருவாக்கப்பட்ட பாப்பாரப்பட்டி சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றையும் முதல்வர் நேற்று திறந்தார்.
மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.78 .41 கோடியில் ராமநாதபுரம்-வல்லிமாடன்வலசையில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரம், நாமக்கல், வையப்பமலையில் அமைக்கப்பட்டுள்ள சுப்ரமணியசாமி கோயில் மலைச்சாலை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலகக் கட்டிடங்கள், பொது சுகாதார கட்டிடங்கள், சமுதாயக் கூடங்கள், பள்ளிக் கட்டிடங்களையும் திறந்தார்.
இதுதவிர, கோயம்புத்தூர், அவினாசி பிரதான சாலையில் உள்ள வஉசி பூங்காவில் ரூ.50 லட்சம் செலவில் நிறுவப்பட்ட ஜி.டி. நாயுடு சிலையையும் முதல்வர் திறந்தார்.
மேலும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மதுரையில் சுப்பிரமணியபுரம் திட்டப் பகுதியில் ரூ.62.68 கோடியில் கட்டப்பட்ட 396 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் 210 திட்டப் பகுதிகளில் 74,522 அடுக்குமாடி குடியிருப்புகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், பி.மூர்த்தி, தலைமைச் செயலர் நா.முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.