சென்னை:
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு (கொமதேக) இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக தரப்பில் வெளியான அறிக்கையில், “நடைபெற உள்ள 2026 சட்டமன்றப் பொதுத்தேர்தலில், முதல்வர் ஸ்டாலினும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரனும் இன்று (13-03-2026) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியனர்.
அதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, தமிழ்நாட்டில் 2 (இரண்டு) சட்டமன்றத் தொகுதிகளில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது” இவ்வாறு அதில் கூறப்படுகிறது.
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு முடிவடைந்த பின்பு கொமதேக பொதுச்செயலாளர் கொங்கு ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், “கூட்டணியின் நலன் கருதியும், நல்லதொரு ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது.
என்டிஏ கூட்டணி கட்சிகள் ஓரிடத்தில் கூட எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி சிறப்பாக இருந்தது எனக் கூறவில்லை” என்று தெரிவித்தார்.