ஈரோடு;
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மைசூர் நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்து உள்ளது உலகப் புகழ் பெற்ற பண்ணாரியம்மன் கோவில். இக்கோவிலுக்கு ஈரோடு திருப்பூர் கோவை நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகா கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் குண்டம் விழா சிறப்பாக நடந்து வருகிறது. அதன் படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பண்ணாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று திருவீதி உலா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அம்மன் சப்பரம் கோவிலை வந்தடைந்தது.
தொடர்ந்து அதிகாலை நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தினமும் பல்வேறு மலைவாழ் மக்கள் தாரை தப்பட்டை மீனாட்சி வாத்தியத்துடன் அம்மன் பாரம்பரிய புகழ்பாடி களியாட்டமும் கம்பம் ஆட்டமும் நடைபெற்றது.
தொடர்ந்து அபிஷேக அலங்கார பூஜையும் காலை குண்டத்திற்கு தேவையான வேப்பம் ஊஞ்ச மர கரும்பு வெட்ட செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று இரவு குண்டத்திற்கு விறகுகள் அடுக்கும் பணியும் இரவு 8 மணிக்கு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அக்னி இடப்பட்டு குண்டம் வளர்க்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணிக்கு சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அடைக்கலம் உடன் பண்ணாரியம்மன் சருகு மாரியம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் குண்டத்திற்கு இடப்பட்ட நெருப்பினை சிக்கரசம்பாளையம் இக்கரை நகமும் புதூர் மற்றும் வெள்ளியம்பாளையம் கிராமங்களைச் சேர்ந்த ஊர் பெரியவர்கள் மூங்கில் கரும்புகளால் தட்டி நெருப்பினை சீராக பரப்பி 15 அடி நீளமும் பத்தடி அகலத்தில் குண்டத்தை தயார் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து குண்டத்தை சுற்றியும் மலர்களை தூவி கற்பூரங்களை ஏற்றி சிறப்பு வழிபாடு பூஜைகள் செய்யப்பட்டது. இதையடுத்து சரியாக இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் கோவில் தலைமை பூசாரி குண்டம் இறங்கினார்.
அதனை தொடர்ந்து அம்மன் படைக்களம் மற்றும் சப்பரம் குண்டத்தில் இறங்கியது. பின் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர்.
இதில் ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், போலீசார் மற்றும் அரசியல் கட்சியினர், சிறுவர், சிறுமிகள் உள்ளிட்ட லட்சக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி பண்ணாரி மாரியம்மனை வழிபட்டனர்.
அப்போது பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்து தாயே.. பண்ணாரி, அம்மா… காவல் தெய்வமே.. எங்களை காக்கும் தெய்வமே… என பக்தி கோஷம் மிட்டனர். விண்ணை முட்டும் அளவுக்கு பக்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதில் சுமார் லட்சக்கணக்கான மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர்.
இதை தொடர்ந்து பக்தர்கள் சாரை, சாரையாக வந்த வண்ணம் இருந்தனர். இதனால் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியது. இன்று மதியம் வரை பக்தர்கள் குண்டம் இறங்கினர்.
அதனை தொடர்ந்து மதியத்திற்கு மேல் சுற்று வட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கால்நடைகளை குண்டத்தில் இறங்கினர்.
குண்டம் இறங்கும்போது கருவறையில் உள்ளே பண்ணாரியம்மனை வீணை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
குண்டம் விழாவை தொடர்ந்து நாளை மதியம் மாவிளக்கு பூஜையும் இரவு புஷ்பரத ஊர்வலமும் நடைபெறுகிறது.
மேலும் மஞ்சள் நீராடுதல் மற்றும் பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை மற்றும் தங்கரத தேர் ஊர்வலம் நடைபெறுகிறது. மறு பூஜை உடன் விழா நிறைவு பெறுகிறது.