30 தொகுதிகளை கூட சரியான இடஒதுக்கீடு செய்து ஒற்றுமையாக செயல்பட முடியாத இண்டியா கூட்டணி, ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு எப்படி நல்லாட்சி வழங்குவர்? – அண்ணாமலை கேள்வி!!

புதுச்சேரி:
30 தொகுதிகளை கூட சரியான இடஒதுக்கீடு செய்து ஒற்றுமையாக செயல்பட முடியாத இண்டியா கூட்டணி, ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு எப்படி நல்லாட்சி வழங்குவர்? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புதுச்சேரி விமான நிலையம் இன்று வந்தடைந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, புதுவையில் அமைந்துள்ள இண்டியா கூட்டணியை கடுமையாக விமர்சித்தார்.

“புதுச்சேரியைப் பொறுத்தவரை உலகத்தில் எங்கும் இல்லாத விசித்திரமான கூட்டணி இது. காங்கிரஸ் கட்சி, கூட்டணி தர்மத்தை மீறி கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதுவே கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லை என்பதற்கான உதாரணம். அதேபோல், திமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள இந்த கூட்டணியில் பரஸ்பர மரியாதை என்பதே இல்லை.

30 தொகுதிகளை கூட சரியான இடஒதுக்கீடு செய்து ஒற்றுமையாக செயல்பட முடியாத இவர்கள், ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு எப்படி நல்ல ஆட்சி வழங்குவர் ?. கூட்டணி அமைப்பதில் தோல்வி, வேட்பு மனு தாக்கல் செய்வதில் தோல்வி, என அனைத்திலும் இந்தக் கூட்டணி தோல்வியடைந்துள்ளது.

தேர்தல் நாளில் இந்தக் கூட்டணி மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும், மக்கள் இவர்களுக்கு தக்க பதிலை வழங்குவார்கள்” என்று அண்ணாமலை கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *