சென்னை:
முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னையும், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியையும் மோசமாக விமர்சனம் செய்து வருகிறார்.
பதிலுக்கு நாங்களும் பேசினால் முதல்வரும், உதயநிதியும் தாங்க மாட்டார்கள் என பாமக தலைவர் அன்புமணி பேசினார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து காரிமங்கலத்தில் நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னையும், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியையும் மோசமாக விமர்சனம் செய்து வருகிறார். பதிலுக்கு எங்களுக்கும் பேசத் தெரியும்.
அவ்வாறு பேசினால் முதல்வரும், உதயநிதியும் தாங்க மாட்டார்கள். அவ்வாறு பேசி மக்களின் கவனத்தை திசை திருப்பவும் விரும்பவில்லை. திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் கூறி வாக்கு சேகரித்து வருகிறோம்.
5 ஆண்டுகால ஆட்சியில் செய்த சாதனைகளைக் கூறி மக்களிடம் வாக்கு கேட்காமல் ரூ.8,000 போலி கூப்பனை காட்டி திமுக அணியினர் வாக்கு கேட்பது வெட்கக்கேடு இல்லையா?
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு காலமாக ஒரு நரக ஆட்சியை திமுக நடத்திக் கொண்டிருக்கிறது.
சின்ன குழந்தைகளை பாலியல் கொடுமை செய்து கொலை செய்யக் கூடிய குற்றங்கள் நடப்பதாக திமுக ஆட்சி உள்ளது.
இதெல்லாம் மாற தமிழக முதல்வராக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வர வேண்டும்.
இன்னும் 1 மாதத்தில் அவரது அமைச்சரவையில் அமைச்சராக பதவியேற்கவுள்ள கே.பி.அன்பழகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
வரவிருக்கும் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப் பேரவை தொகுதிகளிலும் திமுக அணியை டெபாசிட் இழக்கச் செய்யுங்கள்.
தருமபுரி மாவட்டத்துக்கு திமுக அரசு மிகப்பெரிய துரோகம் செய்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.