சென்னை:
தேர்தலையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை (ஏப்.23) நடைபெறுகிறது.
மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் தேர்தலுக்கு முன்பாக ஏப்.21 முதல் 23-ம் தேதி வரை 3 நாட்களும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ம் தேதியும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தொடர்ந்து 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுவதால், நேற்று முன்தினமே மதுப்பிரியர்கள் 3 நாட்களுக்கும் சேர்த்து மதுபாட்டிகளை வாங்கிச் சென்றனர்.
இதனால் நேற்று முன்தினம் மட்டும் ரூ.400 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் ஒருசில இடங்களில் பெட்டி பெட்டியாக வாங்கிச் சென்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ரூ.320 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக ரூ.80 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறும்போது, “தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறும்.
3 நாள் மூடப்படுவதால் விற்பனை அதிகரித்துள்ளது வழக்கமானதுதான். ஒரு நபருக்கு அதிகபட்சம் 6 ஃபுல், குவாட்டர் என்றால் 24 பாட்டில்கள் அதாவது ஒரு பெட்டி மட்டுமே விற்கப்படும்.
இந்த அளவை மீறி விற்பனை செய்யப்பட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் கள்ளத்தனமாக மது விற்பதை தடுக்க கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றனர்.