சென்னை,
தமிழகத்தில் கடந்த 23-ந் தேதி (வியாழக்கிழமை) 17-வது சட்டசபை தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே மாதம் 4-ந் தேதி (திங்கட்கிழமை) எண்ணப்பட இருக்கின்றன.
இதற்கிடையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டடன. இதில் கலவையான முடிவுகள் வெளிவந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளதாகவும், அ.தி.மு.க. கணிசமான இடங்களை பெறும் என்றும், த.வெ.க.வுக்கு இரட்டை இலக்க தொகுதிகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் அ.தி.மு.க. முன்னிலை பெறுவதாக சில கருத்து கணிப்புகளும், த.வெ.க. ஆட்சி அமையும் என்று ஒரு கருத்து கணிப்பும் கூறுகிறது.
இப்படி, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெவ்வேறாக இருப்பதால், “ஆட்சியை பிடிப்போம்” என்ற நம்பிக்கையில் உள்ள அரசியல் தலைவர்கள் தலை சுற்றலில் உள்ளனர்.
இந்த நிலையில், திமுக மூத்த நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
அண்ணா அறிவாயலத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, முத்துசாமி, பெரிய கருப்பன், சி.வி.கனேசன் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்களும் பங்கேற்றனர்.
ஆலோசனையில், திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார்.
மேலும் வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிடும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்படும் வரை, ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
எந்தவித குளறுபடியும் நடந்து விடக் கூடாது. நம்முடைய பார்வையில் இருந்து எந்த ஒரு விஷயமும் தவறாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.