சென்னை:
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35-ஆம் ஆண்டு நினைவுநாளான மே 21 அன்று, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அவரது சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி நினைவுப் பேரணி நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘இந்தியாவை 21 ஆம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்வேன்” என்று சூளுரை மேற்கொண்ட ராஜீவ் காந்தி உலகமே வியக்கும் வகையில் ஒப்பற்ற சாதனைகளை நிகழ்த்தினார்.
சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதே, புதுடெல்லியில் 1982 ஆம் ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளை உலக விளையாட்டு வீரர்களே போற்றி புகழும் அளவிற்கு மிகவும் சிறப்பாக நடத்தி காட்டிய பெருமை ராஜீவ் காந்திக்கு உண்டு.
இந்தியாவின் பிரதமராக 15 ஆண்டுகள் ஆட்சி செய்து இந்தியாவை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த அன்னை இந்திரா காந்தி பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட போது மிக சோதனையான காலக்கட்டத்தில் பிரதமராக பொறுப்பேற்றவர் ராஜீவ் காந்தி. தமது 40 ஆவது வயதில், பாரத நாட்டின் இளைய பிரதமராக பொறுப்பேற்று ராஜீவ் காந்தி நிகழ்த்திய சாதனைகள் ஏராளம்.
பிரதமராக பொறுப்பேற்றதும் விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் தான் இந்த நாட்டின் வறுமையை விரட்ட உதவும் என்று நம்பியவர். இந்தியாவில் இன்று ஏற்பட்டுள்ள அறிவியல், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அன்று வித்திட்டவர்.
அதனால் தான் இன்றைக்கு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறார்கள். நாட்டை எதிர்நோக்கியிருந்த பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு திறந்த மனதுடன் தீவிர முயற்சிகளை மேற்கொண்டவர்.
அவரது அணுகுமுறையில் வித்தியாசம் இருந்தது, மாறுதல் இருந்தது. பஞ்சாப் பிரச்சினையை தீர்ப்பதற்கும், அஸாம் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் உடன்பாடு கண்டவர்.
கூர்கா பிரச்சினையையும், மிசோ மக்கள் பிரச்சினையையும் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தை நிறைவேற்றி, ஜனநாயகத்தை செழுமைப்படுத்தினார். எந்த பிரச்சினையிலும் ஒரு முடிவு காண வேண்டும் என்பதிலே கண்ணும், கருத்துமாக இருந்து செயல்பட்டார்.
ஜனநாயகத்தில் அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிந்திருப்பதை தடுத்து நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றுக்கு அடுத்த நிலையில் பஞ்சாயத்துராஜ், நகர்பாலிகா என்கிற அமைப்புகளை உருவாக்கி மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்தை அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்குவதில் வெற்றி கண்டவர்.
இதன் மூலம், ஜனநாயகத்தை பரவலாக்கினார். மக்கள் பங்கேற்கிற ஜனநாயக நிறுவனமாக இருக்கிற பஞ்சாயத்துராஜ் அமைப்புகளில் மொத்தம் 31 லட்சத்து 87 ஆயிரத்து 320 தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இன்றைக்கு பதவி வகித்து வருகின்றனர்.
இந்த அமைப்புகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில் மூன்றில் ஒரு பங்கினர் பெண்களுக்கென இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது.
பட்டியலின, பழங்குடியின இடஒதுக்கீட்டிலும் பெண்களுக்கு மூன்றில் ஒருபங்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில் 14 லட்சத்து 53 ஆயிரத்து 973 பெண்கள் இந்த இடஒதுக்கீட்டின் மூலம் பயனடைந்துள்ளனர்.
சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக பெண்களுக்கு அதிகாரம் வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தில் மேம்பாடு கண்டவர் ராஜீவ் காந்தி.
இலங்கைத் தமிழரின் 40 ஆண்டுகால பிரச்சினையை தீர்க்க இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவுடன் இந்திய – இலங்கை உடன்பாடு கண்டார்.
இலங்கை தமிழர்களுடைய நல்வாழ்விற்காக தம் இன்னுயிரை பணயம் வைத்து இலங்கையில் தமிழர் ஆட்சியை உருவாக்கி தமிழை அரியணையில் ஏற்றி, தமிழ்த் தாயகப் பகுதியை உருவாக்கியவர் ராஜீவ்காந்தி.
அவர் கண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை நாடாளுமன்றம் நிறைவேற்றிய 13-வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் தான் இலங்கை தமிழர்களுக்கு இன்றும் இருக்கிற ஒரே பாதுகாப்பு கவசம்.
ஆனால், இலங்கை தமிழர்களின் வாழ்வில் விடியலைக் கண்ட ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தமிழகத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்ய வந்த அவரை ஸ்ரீபெரும்புதூரில் பெண் மனித வெடிகுண்டின் மூலம் கோரமாக படுகொலை செய்தார்கள்.
தாமரைப் பூ போன்ற மலர்ந்த முகத்துடன் எந்நேரமும் சிரித்தவாறு எந்த தமிழ் மக்களை நேசித்தாரோ – அதே இனத்தைச் சேர்ந்த அந்நியர்கள் – இந்தியாவின் பகைவர்கள் – தமிழகத்தில் ஊடுருவி சதித் திட்டம் தீட்டி ராஜீவ் காந்தியின் இளகிய மனதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கோழைத்தனமாக – ஒரு பெண்ணை பயன்படுத்தி படுகொலை செய்தார்கள்.
20 ஆம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் ராஜீவ் காந்தியின் படுகொலை செய்தி அறிந்து நாடே அதிர்ந்தது, உலகமே சோக கடலில் மூழ்கியது.
உலகத் தலைவராக ஒளிவிட்டு பிரகாசித்த அந்த அணையா விளக்கை தேச விரோத சதிகாரர்கள் பலாத்காரமாக ஊதி அணைத்து விட்டார்கள்.
ஒளிபடைத்த கண்களோடும், சிரித்த முகத்தோடும் நம்மிடையே பவனி வந்த எழுச்சி முரசம் அடங்கி விட்டது. இளைய நிலா மறைந்து விட்டது.
அன்று 85 கோடி மக்களின் ஆதரவை பெற்று மீண்டும் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க இருந்த மாபெரும் தலைவர் ராஜீவ்காந்தியை படுகொலை செய்து மக்களின் விருப்பத்தை சிதைத்தார்கள், நம்பிக்கையை தகர்த்தார்கள்.
இந்தியாவின் இறையாண்மையை அச்சுறுத்தினார்கள். இத்தகைய அரசியல் சீர்குலைவு பயங்கரவாத சக்திகளின் பிடியிலிருந்து நாட்டைக் காக்க அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவுநாளில் சபதம் ஏற்போம்.
எந்த பயங்கரவாதத்திற்கு ராஜீவ்காந்தி பலியாக்கப்பட்டாரோ அந்த பயங்கரவாதத்தை முறியடிக்க ஓரணியில் திரண்டு சூளுரை ஏற்க வேண்டிய நாளே மே 21. இந்தியாவிற்கு தொடர்ந்து 30 ஆண்டு காலத்திற்கு தலைமையை தரக்கூடிய, மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு மாபெரும் தலைவர் வன்முறை வெறியாளர்களால் சாய்க்கப் பட்டாலும் எந்தெந்த லட்சியங்களுக்காக அவர் தம் வாழ்க்கையை அர்ப்பணித்தாரோ, அந்த லட்சியங்களுக்காக நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்வதே, ராஜீவ் காந்திக்கு நாம் செலுத்துகிற நிறைவான அஞ்சலியாகும்.
எனவே, வருகிற மே 21 அன்று அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் அமரர் ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்தை வாகனத்தில் பொருத்தி மலர்களால் அலங்கரித்து மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் வழியாக நினைவுப் பேரணி நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
அந்த பேரணியில் ராஜீவ் காந்தியின் சாதனைகளை பட்டியலிட்ட துண்டு பிரசுரத்தை விநியோகிக்க வேண்டுமென அன்போடு வேண்டுகிறேன்.
மே 21 அன்று காலை 9 மணி முதல் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவகத்தில் நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்ச்சியில் நானும், மற்ற காங்கிரஸ் முன்னணித் தலைவர்களும் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினரோடு பங்கேற்று அஞ்சலி செலுத்த இருக்கிறோம்.
மறைந்த தலைவர் ராஜீவ் காந்தியின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் வகையில் எந்த ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டாரோ, அங்கு அமைந்துள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக அணி திரண்டு அஞ்சலி செலுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.