சென்னை:
அதிமுகவோடு கூட்டணி அமைப்பது தொடர்பாக பேசுவதற்காக தவெக சார்பில் வந்தவர்களை உதாசீனப்படுத்தினார் என்றும், அதிமுக – தவெக கூட்டணி அமையக்கூடாது என்பதில் குறியாக இருந்தார் என்றும் எடப்பாடி பழனிசாமி மீது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சி.வி.சண்முகம், “ நடந்து முடிந்த தேர்தலில் பழனிசாமி தலைமையில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு முதல் தொடர் தோல்வியை அதிமுக சந்தித்து வருகிறது. அதிமுகவின் வாக்கு வங்கியும் தொடர்ந்து சரிவை நோக்கிச் செல்கிறது.
இந்த தோல்விக்கான காரணங்களை ஆராய வேண்டும், அதிமுகவை மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும், இளைஞர்களை இயக்கத்தில் இணைக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தோம்.
2024 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் நாங்கள் 6 பேர் இதுபற்றி பழனிசாமியை சந்தித்துப் பேசினோம்.
பிரிந்து சென்றவர்கள், நீக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்து ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க வேண்டும் என அவரிடம் சொன்னோம்.
ஆனால், அவர் அதை ஏற்க மறுத்தார். அப்போதும் தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்படவில்லை.
அதிமுகவை ஒருங்கிணைக்க மறுத்த காரணத்தால், வலிமையான கூட்டணியை அமைக்காத காரணத்தால் தோல்வியடைந்துள்ளோம்.
அப்போதே நாங்கள் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று சொன்னோம்.
தவெக சார்பாகவும் கூட்டணி அமைக்க நம்மோடு பேசினார்கள். கூட்டணி பேச வந்தவர்களை உதாசீனப்படுத்தினார்.
கூட்டணி அமையக்கூடாது என்ற நோக்கத்தில், அவர்களிடம் பேசி வெளியேற்றுவதில் குறியாக இருந்தார். அதேபோல தேமுதிகவையும் அரை பர்சண்ட் கட்சி என சொல்லி கூட்டணியிலிருந்து வெளியேற்றினார். டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட யாரையும் அரவணைக்காமல், தான் மட்டும் இருந்தால் போதும் என தேர்தலை சந்தித்தார்.
அதிமுகவை விட்டு சென்ற ஓபிஎஸ், எனக்கு எந்தப் பொறுப்பும் வேண்டாம், அடிப்படை உறுப்பினராக இருக்கிறேன் என்று சொன்னார். அவரையும் சேர்த்துக்கொள்ள மறுத்தார்.
இப்போது பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘ தவறு செய்தவர்கள் திருந்திவந்தால் ஏற்றுக் கொள்வோம்’ என சொல்கிறார்.
கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வது போல, தனது பதவிக்கு ஆபத்து வந்தவுடன் இதுபோல பேசுகிறார். முன்னமே இதனை செய்திருந்தால், பழனிசாமி இன்று முதல்வராகியிருப்பார்.
இதனை கெடுத்து, அதிமுக படுதோல்வியடைய யார் காரணம்? இதையெல்லாம் செய்துவிட்டு அவர் தன்னை நல்லவர் போல காட்டிக் கொள்கிறார்.
நாங்கள் அதிமுகவுக்கு துரோகம் செய்துவிட்டதுபோல இன்று அறிக்கை வெளியிடுகிறார். தனிப்பட்ட முறையில் யாரையும் நாங்கள் விமர்சனம் செய்யமாட்டோம்.
ஆனால், எங்களையும், எங்கள் குடும்பத்தையும் பற்றி கண்ணியமற்று விமர்சிக்கிறார்கள். பலமான அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எங்களின் ஒரே நோக்கம்.
இன்று பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார். அதற்காகவே நாங்கள் பொதுக்குழுவை கூட்டி விவாதிப்போம் எனக் கோரிக்கை விடுக்கிறோம்.
பொதுக்குழுவை கூட்டி இரு தரப்பும் கருத்தை தெரிவிப்போம், பெரும்பான்மை உறுப்பினர்கள் எதனை ஏற்றுக் கொள்கிறார்களோ அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
ஒருபக்கம் பேசித் தீர்க்கலாம் என சொல்லிவிட்டு, மறுபுறம் 31 மாவட்டச் செயலாளர்களை பழனிசாமி நீக்குகிறார். பொதுக்குழுவை கூட்ட கையெழுத்துப் போட்டால் உங்கள் பதவி பறிக்கப்படும் என அச்சுறுத்தல் விடுக்கிறார்.
இதுபோல மிரட்டப்பட்டால் எப்படி கட்சி வளரும்? கட்சி பொறுப்புகளில் இருந்து பழனிசாமியால் நீக்கப்பட்டது சட்டப்படி செல்லாது.
பன்னீர்செல்வம் – பழனிசாமி தொடர்பான வழக்கில், ஜெயலலிதா இருந்தபோது பொறுப்புகளில் இருந்தவர்களுக்கே கையெழுத்து போடும் அதிகாரம் என தீர்ப்பு வந்தது.
அதேபோல, அதிமுகவில் எங்களுக்கும், பழனிசாமி தரப்புக்கும் மோதல் ஏற்பட்ட மே 11ஆம் தேதிக்கு முன்பு யாரெல்லாம் பொறுப்பில் இருந்தார்களோ, அவர்களே பதவியில் நீடிப்பார்கள். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
அதிமுக சட்டவிதிகளின் படி 5ல் 1 பங்கு பொதுக்குழு உறுப்பினர்க ளின் கையெழுத்தை பெற்று பொதுச்செயலாளரிடம் கொடுத்தால், பொதுக்குழுவை 30 நாட்களுக்குள் கூட்டவேண்டும் என உள்ளது. ஆனால் சர்வாதிகாரமாக பழனிசாமி அதனை ஏற்க மறுக்கிறார்.
மறுபுறம் பொதுக்குழுவை கூட்ட வேண்டாம் என சுற்றறிக்கை விடுகிறார். பொதுக்குழுவை கூட்டி தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க வேண்டும்.
அனைவரையும் ஒருங்கிணைத்து அதிமுகவை வலிமையான இயக்கமாக்க வேண்டும். நாங்கள் பேசத் தயார், ஆனால் பொதுக்குழுவை கூட்டி விவாதம் செய்ய வேண்டும்” என்றார்.