புதுச்சேரி:
முதல்வர் ரங்கசாமி ராஜினாமா ஏற்கப்பட்டதை அடுத்து, தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் இன்று அறிவித்துள்ளது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவைத் தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் தொகுதிகளில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
சட்டப்படி 14 நாட்களில் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்யவேண்டும் என்பதால், தான் போட்டியிட்டு வென்ற தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து கடந்த 17-ல் சட்டப்பேரவை செயலர் தயாளனிடம் ரங்கசாமி கடிதம் தந்தார்.
அக்கடிதத்தை தற்காலிக பேரவைத்தலைவர் அன்பழகன் பரிசீலித்து ராஜினாமாவை ஏற்றார். அதையடுத்து தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் இன்று அறிவித்தது.
தொகுதி ராஜினாமா விவரம் தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது. காலியான இத்தொகுதியில் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.