சென்னை:
ரூ.180 கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி பொதிகை ரயில் சென்று கொண்டிருந்தது.
அந்த ரயில் மதுரை சந்திப்பு ரயில் நிலையத்தில் நிற்கும்போது மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது அந்த ரயிலிலிருந்து ரூ.180 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சென்னை கொடுங்கையூர் அபிராமி அவென்யூ பகுதியைச் சேர்ந்த பிலோமன் பிரகாஷ், வியாசர்பாடி சாஸ்திரி நகர் 11-வது தெருவைச் சேர்ந்த யேசுராஜ் (39) உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
கடத்தல் கும்பலின் தலைவராக செயல்பட்ட யேசுராஜ், இக்கடத்தலில் நீண்ட காலமாக ஈடுபட்டிருப்பதும், போதைப் பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தில் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கியிருப்பதும், அதில் பல சொத்துகளை பினாமிகள் பெயரில் வாங்கியிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து இவ்வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாகக் கருதி மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு, அமலாக்கத் துறை விசாரணை செய்ய அண்மையில் பரிந்துரை செய்தது.
அந்த பரிந்துரையின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கினர்.
வழக்குக்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில், வியாசர்பாடி சாஸ்திரி நகரில் யேசுராஜ் வீடு, அவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ள கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள ஜான் பிரிட்டோ வீடு, பிலோமன் பிரகாஷ் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையை ஒட்டி, அங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், வழக்குத் தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க முடியும் என்று அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.