திருப்பதி;
திருப்பதியில் மே மாதத்தில் சாதனை அளவிலான பக்தர்கள் வந்துள்ளனர்.
கோடை விடுமுறை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டதையடுத்து, நாடு முழுவதிலும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, இந்த ஆண்டு மே மாதத்தில் திருப்பதி கோவிலில் சாதனை அளவிலான தரிசனங்கள், காணிக்கைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.
மே மாதத்தில் 25 லட்சத்து 46ஆயிரத்து168 பக்தர்கள் வருகை தந்தனர்.
சாதாரண நாட்களுடன் ஒப்பிடும்போது, கோடை காலத்தில் வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது.
இந்த ஆண்டு மே மாதத்தில் கடும் வெயில் இருந்தபோதிலும், இறைவன் மீது ஆழ்ந்த பக்தியுடன் பக்தர்கள் பெருமளவில் வந்தனர்.
பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க திருமலை தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
மே மாதத்தில், ரூ.120.28 கோடி உண்டியல் வருமானம் கிடைத்தது. திருப்பதி கோவிலில் வரலாற்றில் ஒரே மாதத்தில் கிடைத்த இந்த அளவிலான வருமானம், பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு ஒரு சான்றாகும்.
பணமாக மட்டுமல்லாமல், பக்தர்கள் உண்டியல்களில் பெருமளவு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களையும் நன்கொடையாக வழங்கினர்.
மே மாதத்தில் 12 லட்சத்து 29ஆயிரத்து 773 பக்தர்கள் முடிகாணிக்கை சமர்ப்பித்துத் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 90,826 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
42,747 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.85 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.