சென்னை:
வாக்குப் பதிவு நாளன்று, துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர், கட்சியினரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தாக்கல் செய்த மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு நாளான கடந்த ஏப்ரல் 23ம் தேதி, சென்னை துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் சினோரா அசோக், தேர்தல் பணிமனையில் இருந்தபோது, அங்கு வந்த முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மற்றும் திமுகவினர், தவெக வேட்பாளரையும், தவெக தொண்டர்களையும் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக வடக்கு கடற்கரை போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான சேகர் பாபு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, சேகர் பாபு தரப்பில், சம்பவம் நடந்து 29 நாட்களுக்கு பின், புதிய அரசு பொறுப்பேற்ற பின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகாரில் கூறியது போல் எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கை ரத்து செய்ய எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி, சேகர் பாபுவின் மனுவை தள்ளுபடி செய்வதாகவும், விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பின்னர், சேகர் பாபு தரப்பில் மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.