சென்னை:
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக, ‘ஜனநாயகன்’ பட தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணா நியமிக்கப்பட் டுள்ளார்.
மாநில – மத்திய அரசுகளிடையே முக்கிய நிகழ்வுகளில் பாலமாக செயல்படும் வகையில் மாநில அரசுகள் சார்பில் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமிக்கப்படுவது வழக்கம்.
இவர் மாநில அமைச்சரின் அந்தஸ்தில் இருப்பார். மேலும், மத்திய அமைச்சகங்கள், நிதி ஆயோக் மற்றும் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு ஒப்புதல், நிதி ஆகியவற்றை பெற்றுத்தரும் பணியில் ஈடுபடுவார்.
முந்தைய திமுக ஆட்சியில் ஏ.கே.எஸ்.விஜயன் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருந்தார்.
தமிழகத்தில் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், டெல்லி சிறப்பு பிரதிநிதியாக யாரை நியமிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், முதல்வர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளரான கர்நாடகாவைச் சேர்ந்த கே.வெங்கடரமணாவை தற்காலிகமாக டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஓராண்டு பதவி வகிப்பார்
தலைமைச்செயலர் மு.சாய் குமார் இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், ‘‘தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி தற்காலிகமாக உருவாக்கப்பட்டு, கே.வெங்கட ரமணா நியமிக்கப்படுகிறார்.
இவர் பதவியேற்கும் நாளில் இருந்து ஓராண்டுக்கு இப்பதவியில் இருப்பார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெங்கட ரமணா தற்போது கோட்டூர்புரம், சூர்யா நகரில் வசித்து வருகிறார்.
முதல்வர் விஜய்யின் நெருங்கிய நண்பரான வெங்கட ரமணா, முதல்வர் விஜய், பதவியேற்புக்கு முன்னதாக ஆளுநர் ஆர்.வி.அர்லே கரை சந்தித்த நிகழ்வுகளில் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.