நாகப்பட்டினம்:
எனக்கு அமைச்சர் பதவி ஆசை காட்டி தவெகவில் சேரும்படி முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அழைத்தார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்எல்ஏ குற்றம்சாட்டினார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் தங்கள் மீதான வழக்குகளில் இருந்து தப்பிக் கொள்ளவும், சொத்துகளை பாதுகாத்துக் கொள்ளவுமே தவெகவில் இணைந்துள்ளனர்.
சி.விஜயபாஸ்கர் தன் மீது எத்தனை வழக்குகள் உள்ளன என்பதை விளக்க வேண்டும்.
தவெக அரசு சி.விஜயபாஸ்கரின் சொத்து விவரங்களை வெள்ளை அறிக்கையாக மக்களுக்கு தரவேண்டும். 120 குவாரிகளை மூடிவிட்டதாக தெரிவிக்கும் கனிம வளத் துறை அமைச்சர், சி.விஜயபாஸ்கர் குவாரியில் நடப்பதெல்லாம் சட்டப்படிதான் நடக்கிறதா என்பதை அறிவிக்க வேண்டும்.
அத்துடன், தவெகவுக்கு அணி சேர்க்கும் வேலையில் சி.விஜயபாஸ்கர் ஈடுபட்டது நடத்தைக் கெட்ட ஒரு மனிதனின் செயலுக்கு ஒப்பானது.
அவர் என்னை தொலைபேசியில் அழைத்து ‘உங்களுக்கு அமைச்சர் பதவி காத்துக் கொண்டுள்ளது’ என கூறி தவெகவில் சேர அழைத்தார். ஆனால், அந்தப் பதவியும் சேர்த்து நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று அவரிடம் கூறிவிட்டேன்.
பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு, வழக்குகளில் இருந்து தப்பிக்க ஓடுபவர்களால் அதிமுகவுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது.
தூய ஆட்சியை தருவதாக கூறும் தவெக, குதிரை பேரத்தில் ஈடுபடுவதை தவிர்த்து மறுதேர்தலை சந்திக்க தயாராக வேண்டும். 2 எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு ஆதரவு தரும் கட்சிகள் மீதுள்ள அவநம்பிக்கையால் தான் தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.