தமிழகத்தில் நாளை முதல் ஜூலை 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மிதமான மழை பெய்ய வாய்ப்பு!!

சென்னை:
தமிழகத்தில் நாளை முதல் ஜூலை 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடமேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஒடிசா – மேற்கு வங்க கடலோர பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, நிலவி வருகிறது. இது அடுத்த 2 நாள்களில் வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஒடிசா மற்றும் வடக்கு சத்தீஸ்கர் பகுதிகளை அடையக்கூடும்.

தமிழகத்தில் நாளை (ஜூலை 5) ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

6 முதல் 10-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

மத்திய வங்கக்கடலின் சில பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுதினம் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய வங்கக்கடலின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று அதிகபட்சமாக 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 19 செமீ, கோவை மாவட்டம் சின்னக் கல்லாரில் 14 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர், நீலகிரி மாவட்டம் மேல் பவானியில் தலா 9 செமீ, கோவை மாவட்டம் உபாசியில் 7 செமீ, சின்கோனா, சோலையாரில் தலா 6 செமீ, நீலகிரி மாவட்டம் எமரால்டு, கோவை மாவட்டம் வால்பாறை, சிறுவாணி அடிவாரத்தில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *