கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம்; அதை போதைப்பொருள் விவகாரமாக சித்தரிக்க வேண்டாம்!! பேரவையில் நிர்மல் குமார் விளக்கம்….

சென்னை:
“கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம்.

அதை போதைப்பொருள் விவகாரமாக சித்தரிக்க வேண்டாம்,” என தமிழக சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும், மாணவர் அமுதன் கொலை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “100 நாள் சாதனை எனப் பெருமை பேசும் தவெக அரசு, இந்த 100 நாட்களில் சட்டம் – ஒழுங்கு நிலையையும் பார்க்க வேண்டும். போதைக்கு எதிரான தொடர் ஒழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கோவையில் மாணவர் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலைச் செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை கோஷ்டி மோதல் என்று அமைச்சர் கூறுகிறார்.

உண்மையில் அது கோஷ்டி மோதல் அல்ல. போதைப் பொருள் பயன்படுத்தபட்டது தொடர்பாக புகார் அளித்ததால்தான் மாணவர் கொலை செய்யப்பட்டதாக மாணவனின் பெற்றோர் கூறுகின்றனர்.

எனவே, இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

கோவை சம்பவத்தில் மைதானத்திலேயே வைத்து மாணவர் அமுதனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றதாக சொல்லப்படும் நிலையில் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்,” என்றார்.

தொடர்ந்து இந்த கவன ஈர்ப்புத் தீர்மானம் மீது பல்வேறு கட்சியினரும் பேசினர். பின்னர் தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேசுகையில், “கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கு, உண்மை நிலவரத்துக்கு மாறாக சித்தரிக்கப்படுகிறது.

கோவை மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம்.

எனவே, இதை போதைப்பொருள் விவகாரமாக சித்தரிக்க வேண்டாம். மேலும், உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கோ, காவல்துறைக்கோ இல்லை.

அமுதன் கொலையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் 3 மாதங்களுக்குள் குற்றப் பதிரிகை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *