சென்னை:
விஜய்யை 2026-ல் முதல்வர் நாற்காலியில் அமரவைத்த ராகுல் காந்தியே, 2029-ல் அவரது கையைப் பிடித்து பிரதமர் நாற்காலியிலும் அமரவைப்பார் என்று தவெக எம்எல்ஏ கூறியுள்ளார்.
ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்பதில் முதல்வர் விஜய் தெளிவாக இருக்கிறார் என காங்கிரஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் நேற்று கூறும்போது, ‘‘2029-ல் பிரதமர் யார் என்பதை இனி டெல்லி முடிவு செய்யப்போவது இல்லை; தமிழகம்தான் முடிவு செய்யும்.
எங்கள் தலைவர் விஜய்தான் 2029-ல் பிரதமராகப் போகிறார். 2026-ல் விஜய்யை முதல்வர் நாற்காலியில் அமர வைத்த ராகுல் காந்தியே, 2029-ல்அவரது கையைப் பிடித்து பிரதமர் நாற்காலியிலும் அமரவைப்பார்.
இந்திய அரசியலில் 2029-ல் மிகப்பெரிய அதிர்ச்சிகரமான மாற்றம் ஏற்படும்’’ என்றார்.
இதற்கு பதில் கொடுக்கும் விதமாக, பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத்தலைவர் தாரகை கத்பர்ட், ‘‘அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே தலைவர் ராகுல் காந்திதான்.
தவெக எம்எல்ஏக்கள் இன்னும் ரசிகர் மனப்பான்மையிலேயே பேசுகின்றனர். ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்பதில் முதல்வர் விஜய்யே தெளிவாக இருக்கிறார்.
எனவே, தேவையற்ற ஊகங்களுக்கு இடமளிக்க வேண்டாம். 2029-ல் ராகுல் காந்திதான் பிரதமர்’’ என்று தெரிவித்தார்.