சென்னை:
ஆசிரியர் தினம் இன்று (செப்.5) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆசிரியர்களுக்கு தங்களது வாழ்த்து களை பகிர்ந்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி களில் கூறியிருப்பதாவது:
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்: ஆசிரியர்கள்தான் சிறந்த குடிமக்களை வகுப்பறையில் உருவாக்குகிறார்கள்.
பல மாணவர்கள் பல்வேறு நிலைகளில் உயர்ந்து சாதனைகளை படைக்க உந்து சக்தியாக இருப்பவர்கள் ஆசிரியர்கள். அவர்களை போற்றி, அவர்களது பங்கை அங்கீகரிக்கும் வகையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவது மிகவும் பொருத்தமானது. இந்தியாவின் சிறந்த குடிமக்களை உருவாக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்.
பாமக தலைவர் அன்புமணி: ஆசிரியர்கள் கவலையின்றி வாழ்ந்தால் தான் மாணவர்களை முன்னேற்ற முடியும். அதற்கு வசதியாக ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற் றுவதுடன், தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களையும் குறைந்தபட்சம் 35 சதவீதமாக குறைக்க வேண்டும்.
இதன் மூலம் ஆசிரியர்களின் வாழ்க்கை முன்னேற்றம் பெற அரசு வழிவகை செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: சமூகத்தை வடிவமைப்பதில் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு அளப்பரியது. மாணவர்களின் கல்விக்கும், ஒழுக்கத்துக்கும், நற்பண்புகளுக்கும் முன்னுதாரணமாக விளங்கும் ஆசிரியர்கள் என்றும் நன்றிக்குரியவர்கள். அவர்களது மனிதாபிமான பணியை அனைவரும் மனதில் வைத்து ஆசிரியர்களின் முன்னேற்றத்துக்கு துணை நிற்போம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: மாணவர்களிடையே அறிவை விதைத்து, ஒழுக்கத்தை வளர்த்து, வெற்றியை அறுவடை செய்யும் வகையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் அனைவரின் கல்விப் பணி மென்மேலும் சிறந்தோங்க வேண்டும் எனக்கூறி, ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து: மாணவர்களின் அறிவை வளர்த்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து, நல்ல மனிதர்களாகவும் பொறுப்புள்ள குடிமக்களாகவும் உருவாக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துகள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.