பெரம்பலூர்:
பெரம்பலூரில் பச்சைமலைத் தொடரில் கனமழை பெய்துவருவதால், அடைக்கப்பட்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனிடையே, மழை வெள்ளம் காரணமாக ஓடையில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டம் அடைக்கப்பட்டி கிராமத்தை ஒட்டி பச்சைமலை தொடர் உள்ளது.
மழை நேரங்களில் இந்த பச்சைமலையின் வழியாக மங்கலம் அருவி, விஸ்வகுடி நீர்த்தேக்கம் மற்றும் அடைக்கம்பட்டி சின்ன ஏரி மற்றும் பெரிய ஏரிக்கு நீர் வழிந்தோடும்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பச்சைமலைத் தொடர் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக மங்கலம் அருவி, விஸ்வகுடி நீர்த்தேக்கத் திற்கு தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதேபோல ஆலத்தூர் வட்டம் அடைக்கப்பட்டி சின்ன ஏரி மற்றும் பெரிய ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக மழை நேரங்களில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று பச்சைமலைத் தொடர் பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால் அடைக்கப்பட்டி சின்ன ஏரி, பெரிய ஏரிக்கு நீர்வரத்து வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து காணப்பட்டது.
இதனால் விவசாய நிலங்களுக்கு வெள்ள நீர் புகுந்தது. மேலும் அடைக்கப்பட்டி ஏரிகளுக்கு வந்த ஓடைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
நேற்று மாலை கனமழையின் போது, அடைக்கப்பட்டி ஏரிகளையொட்டி விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் ஓடை வழியாக மறுபக்க கரைக்கு செல்ல முயன்றுள்ளனர்.
அப்போது ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால், ஓடைகளை கடக்க முயன்றவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட் டனர். அதில் ஒருவர் இருச்சக்கர வாகனத்துடன் இழுத்து செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் கயிறு மூலம் ஓடையில் இழுத்துச் சென்றவர்களை மீட்டு கரை சேர்த்தனர். மேலும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருச்சக்கர வாகனத்தையும் மீட்டனர்.
திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏரிக் கரைகள் மற்றும் ஓடைகளின் அருகே பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப் பட்டுள்ளது.
தொடர்ந்து பச்சைமலை தொடர் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.