ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த பின்னர் தாய் இறந்த மறுநாளில் மகன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத் தில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை எண்ணப் பட்டன.
இதில், பரத்பூர் மாவட்டம் நத்பாய் நகராட்சியில் 6-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட ஜெகதிஷ் பிரசாத், பாஜகவின் ராம்ஷரனைவிட ஒரு வாக்கு (151 – 150) அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த வார்டில் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், இவ்வளவு நெருக்கமாக இருக்கும் என்று யாரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள்.
எனினும், தேர்தல் முடிவு வந்தடைந்தபோது, இனிப்புகள் வழங்கப்பட வேண்டிய ஜெகதிஷ் பிரசாத் வீடு, அதற்குப் பதிலாக இரங்கல்களைப் பெற்றது.
இதனால் ஜெகதிஷ் பிரசாத்தால் வெற்றியைக் கொண்டாட முடியவில்லை. ஏனெனில், அவரது தாய் வாக்களித்த நாளுக்கு அடுத்த நாளே காலமானார்.
இதில் ஒரு குறிப்பிடத் தக்க விஷயம் என்னவென்றால், தாய் வாக்களிப்பதற்கு முன்பே இறந்திருந்தால் ஜெகதிஷ் வெற்றி கேள்விக் குறியாகி இருக்கும்.
எனவே, ஒரு குடிமகளாக ஒரு தாயின் கடைசிச் செயல் மகனை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கக்கூடும். சில தேர்தல் முடிவுகள் எண் கணிதத்தின் மூலம் தீர்மானிக்கப் படுகின்றன.
சில முடிவுகள் முற்றிலும் வேறுபட்ட ஒரு காரணத்துக்காக நினைவில் கொள்ளப்படுகின்றன.